\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

நல் நுண்ணுயிர்களும் (Pro-Biotics) நாணயமான தமிழ் உணவுகளும்

Probiotics_2_520x390பாக்டீரியா (Bacteria) எனப்படும் நுண்ணுயிரி என்ற சொல்லைக் கேட்டவுடனே சாதாரணமாக நமது மனதில் தோன்றுவது என்ன? அது ஒரு கிருமி, எனவே தொற்றாமல் உடன் விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதே. இதை வழிவகுத்தது சென்ற நூற்றாண்டுச் சுகாதாரக் கல்வி. சராசரி மக்களின் கண்ணோட்டத்தை அவதானித்தால் இது இலகுவில் தெளிவாகும். தமிழர் தாயகங்களில் வெளிவரும் விளம்பரத் தகவல்களை எடுத்துப் பார்த்தாலும் பொதுவாக இம்மனோநிலையே தொடர்ந்தும் பேணப்படுகிறது எனலாம். இன்றும் கிருமிகளை அழிக்க டெட்டால், ஃபினைல், லைசால் போன்ற விளம்பரங்கள் ஆங்காங்கு தொலைக்காட்சியில் வந்தவாறு உள்ளன. இப்பேர்ப்பட்ட சிந்தனை சமீப உயிரியல் ஆராய்ச்சி முடிவுகளைப் பொறுத்த அளவில் சற்று முரண்பாடானதாகக் காணப்படுகிறது. நுண்ணுயிர்களில் பல நமக்குப் பயன் தருபவை. பல நுண்ணுயிர்கள் நமக்கு உதவியாகவுள்ளன என்பதே இக்கட்டுரையின் எடுத்துக்கூறல்.

தமிழ் வீடுகளில் பாரம்பரிய உணவுப்பண்டங்களாகிய தயிர், ஆப்பம் இட்லி, தோசை, ஊத்தப்பம், ஊறுகாய், பழஞ்சோறு, ஊறவைத்துத் தாளித்த குழம்பு, புளி்ச்சாதம் எனப் பல்வேறு வகையான உணவு வகைகள் உண்டு வந்தோம். ஆயினும் இன்று நகர வாழ்க்கை நாளாந்த பிரயாசைகளினால் சமையலிற்குச் செலவிடப்படும் நேரமானது வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால் பெரும்பாலான இளைய தமிழர் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் உடன் பரிமாறு உணவுகளையே பொதுவாக உட்கொண்டு வருகின்றனர்.

உடன் பரிமாறு உணவுகள் தயாரிக்கும் நேரகாலத்தைக் குறைத்தது போல் தோன்றினும் அந்தச் சிறு சௌகரியங்களோடு நாளடைவில் பாதகமான மறுவிளைவுகளை உண்டாக்குகின்றன. இதற்கு ஆதாரம் பல்லாண்டுகளாகத் திரட்டப்பட்ட நோயாளிகள் பற்றிய மருத்துவர் குறிப்புத் தரவுகள். சென்ற நூற்றாண்டில் உலக மாயுத்தங்களின் போது விஞ்ஞான ரீதியில் அதியுற்பத்தி என்ற நோக்குடன் தொழிற்சாலை உணவுத் தயாரிப்பிலும், மற்றும் நோய் நீக்கி மருந்துகள் எனவும் நுண்ணுயிர்த் தடுப்பு இரசாயனங்களும், தடுப்பூசிகளும் கை முறைக்கு வந்தன. இதன் பொருட்டு நுண்ணுயிர்க் கிருமி கொல்லிகளாக பெனிசிலின் (penicillin) தொடங்கி பலரக மருந்துகள் (Anti-Biotics) புழக்கத்தில் வந்தன.

நுண்ணுயிர் கொல்லிகள் (Anti-Biotics) அதிக பாவனை

பெனிசிலின் மருந்து கண்டு பிடிக்கப்பட்டதில் இருந்து நுண்ணுயிர்க் கொல்லிகள் சர்வ விரோத வியாதி விடுவிப்புக் கை மருந்தாகி விட்டது. சிறு தடிமல் தொடங்கி பெரும் வியாதிகள் யாவற்றிற்கும் மருத்துவமும் தொற்று நோய் தவிர்த்தல் என்ற ரீதியில் மருத்துவர் தாராளமாகப் பாவித்து வந்தனர்.

இதே போன்று உணவுத் தொழிற்சாலையாளரும் இந்த கிருமி கொல்லிகளைப் பாவித்தனர். உலகளாவிய ரீதியில் பால், முட்டை, இறைச்சி போன்றவை உற்பத்தி செய்யப்படும் பெரும் விவசாயத் தொழிற்சாலைகளில் உக்கிரமாக நுண்ணுயிர்க் கொல்லிகள் பாவித்து வரப்படுகின்றன.

அதன் பரிவிழைவு இயற்கையாக நமது உடல் கிருமி எதிர்ப்பு வலிமை குறைதல் மற்றும் கிருமிக் கொல்லிகளை தாக்குவதற்குக் கூடிய சக்தி வாய்ந்த புதிய கிருமிகளைத் தோற்றுவித்ததும் ஆகும்.

கிருமி அழிப்பு என்ற தலைப்பில் பின்பற்றி வரும் பழைய கைமுறைகள் மனிதர்க்கும், சுற்றாடலுக்கும் பாதிப்புக்களை உண்டு பண்ணிவருகின்றன என்று பலதரப்பட்ட சுகாதார ஆய்வுக்கூட அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

தற்போது நமது தமிழ் மக்கள் நமது பாரம்பரிய உணவுகளை விட்டு மேலத்தேய உணவுப் பண்டங்களை அவாவுடன் உண்ணும் தருணத்தில் நவீன ஆராய்ச்சிகள் நுண்ணுயிர்கள் கூடிய புளித்த உணவுகள் உடலுக்கு சாலவும் நன்று என்கின்றன. இன்று உணவுச் சந்தையில் நல் நுண்ணுயிர் (Pro-Biotics) சார்ந்த உணவுகள் பிரபல்யம் அடைந்து வருகின்றன. இதையொற்றிய நம்மவர் நிலைப்பாடு என்னவென்றால் பாரம்பரிய உணவுத் தயாரிப்புக்களைத் தவிர்த்து அதிக விலை கொடுத்து நல் நுண்ணுயிர் (Pro-Biotics) சார்ந்த உணவுகள் வாங்கி உண்டும் வருகின்றார்கள்

பழமை இன்றைய புதுமை

தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளாக புளித்த உணவு வகைகளைத் தமது சமிபாட்டு சுகாதாரத்திற்காகப் பக்குவமாகத் தயாரித்து உண்டு வந்துள்ளனர். மூதாதையினர் தற்போதய விஞ்ஞான விளங்கங்கள் தெரிந்திராவிடினும், அவர்கள் நல் நுண்ணியிர் கூடிய உணவுத் தயாரிப்பு முறை அனுகூலங்களை நன்று அறிந்திருந்தனர்.

நல் நுண்ணுயிர்கள் அழிவு உடலிற்காகது

உடல் உணவுக் கால்வாயில் (digestive track) குடலில் காணப்படும் பன்கோடி நுண்ணுயிரினங்கள் எமது சமிபாட்டிற்கு உதவி புரிகின்றன. இதனால் தான் சுகயீன ரீதியில் கிருமிக் கொல்லி (Anti-Biotics) எடுப்பின் அவை நோய்க் கிருமிகளையும் அதனோடு சேர்த்து நல் நுண்ணுயிர்களையும் குடலில் அழித்து விடுகிறது. கிருமிக் கொல்லி மருந்து உட்கொள்ளுவதால் வயிற்றுழைவு, வயிற்றோட்டம், வயிற்றினால் சமிபாடு அற்றுப் போகுதல் போன்ற பிரதி விளைவுகளை நாம் எதிர் நோக்குகின்றோம்.

.

போதிய நல் நுண்ணுயிர்கள் எமது சமிபாட்டுக் கால்வாயில் இல்லாது போனதால்தான் பால் சகிக்காமை வியாதி (lactose intolerance), உடன் வயிற்றோட்டம் (irritable bowel syndrome – IBS) போன்ற நிலைப்பாடுகள் ஏற்படுவதற்குக் காரணிகள் என்றும் அறியப்பட்டுள்ளது. மேலும் குடலில் வாழும் நல் நுண்ணுயிரனங்கள் உணவுச் சத்துக்களை உடல் உறிஞ்சிக் கொள்ளவும் வழிவகுக்கின்றனவாம்.

மாறிவரும் உணவுப் பழக்கங்கள்

விரைந்தோடும் வாழ்க்கை முறையில் நவீனத் தமிழர் உணவுப் பழக்கங்களை எடுத்துப் பார்த்தால் இது சற்றுக் கவலை தரும் விடயமாகும். தமிழர் மத்தியில் சலரோகம் அல்லது நீரழிவு நோய் (diabetes) அதிக பாதகங்களைக் கடந்த 50-60 ஆண்டுகளில் உருவாக்கியுள்ளது. மேலும் இரண்டாவது வியாதி மாரடைப்பு நோய். இந்த இரண்டு நோய்களும் ஆண்களையும் பெண்களையும் எமது உணவுக் கைமுறை மற்றும் ஆரோக்கிய கவனயீனங்களால் சத்தமின்றிக் கொன்று வருகிறது.

அமெரிக்க நாட்டை எடுத்துக்கொண்டால் பொதுச் சமூகத்தில் வருடா வருடம் 600,000 க்கும் மேற்பட்டவர் வியாதிகளினால் உயிரிழந்து வருகின்றனர். இதற்குப் பிரதான காரணம் உடல் பயிற்சியின்மையும், செயற்கை தொழிற்சாலையி்ல் செய்யப்பட்ட இலகு உணவுகள் என்று பல சான்றுகள் சுட்டிக் காட்டுகின்றன.

Probiotics_1_520x346நுண்ணுயிர்ப் பண்டங்களின் பயன்கள்

அமெரிக்க இருதய சம்மேளனம் (American Heart Association) தமது வழிகாட்டலில் நல் நுண்ணுயிர் கூடிய உணவுப் பண்டங்களை உட்கொள்ளுதல், மாரடைப்பு மற்றும் மாசுக் கொழுப்பை (Bad Cholestrol) மட்டுப்படுத்தவும், குருதிக் கலன்கள் (blood vessels) தடையின்றி ஓடவும் உதவும் எனக் கூறியுள்ளது.

தமிழர்களின் அடிப்படை வாழ்க்கை முறைகள் பொதுவாக இயற்கை எழில் பரந்த கிராமத்தில் இருந்து பல கோடிக் கணக்கானவர்கள் வாழும் நெருக்கடி நகர வாழ்க்கையாக மாறியுள்ளது. இது தொற்றுநோய் தோன்றுவதற்கும் பொதுமக்கள் சுகாதீனங்கள் தொடர்வதற்கும் காரணி. இன்று பிறந்த மண் வாழ்க்கையிலும் சரி புகுந்த மண் வாழ்க்கையிலும் சரி தமிழர்கள் பலதரப்பட்ட தொற்று நோய்களை எதிர் கொள்கின்றனர்.

மேலும் வேக விமானப் பயணங்களும் தொற்று நோய்களை பூகோளத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றைய பக்கத்திற்கு மணிக் கணக்கிலேயே பரவ வழிவகுக்கிறது. இது நவீன வாழ்க்கையின் இன்னொரு கேடு. எனவே நகர வாழ்க்கையில் நாமும் குழந்தைகளும் தொற்று நோய்க்கிருமிகளை அலை, அலையாக சர்வசாதாரணமாக எதிர்நோக்க வேண்டியுள்ளது.

மேற்குறிப்பிட்ட விடயத்தை நமது மாநிலமாகிய மினசோட்டா ஏன் வட அமெரிக்க மாநிலத்தை குறித்து அவதானித்தாலும் பல விடயங்கள் தெரிய வருகின்றன. பருவகால மாற்றங்களின் போது மக்கள் வியாதிகளினால் அதிகளவில் பாதிக்கப் படுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக 2013-2014 வருட இலையுதிர்காலம் தொட்டு பனிக் காலம் வரை சராசரி மக்கள் தொற்றுநோய் சுகவீனங்கள் அதிகரித்துத்துள்ளதாக மாநில வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

நல் நுண்ணுயிர் உணவுப் பண்டங்கள் தொற்று நோய் எதிர்ப்புச் சக்தியையும் ஊக்குவிக்கும் என்று பிரபல ஹார்வர் சுகாதாரப் பிரசுரங்கள் கூறுகின்றன. குடலில் வாழும் நுண்ணுயிரினங்கள் எமது உடலின் சமிபாட்டுச் சமநிலை பேணுவதில் பங்கு வகிக்கின்றன. உதாரணமாக நன்மை தரும் பாக்டீரியாக்கள் சம நிலைப் பேணலின் மூலம் வெளிச் சூழலில் இருந்து உட்பிரவேசிக்கும் தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராட தமது சுரப்புகளாலும் உதவிபுரிகி்ன்றன.

நமது மூதாதையர் சம்பிரதாயப்படி நன்மை தரும் நுண்ணுயிர்கள் தரும் புளி்ப்புணவுகள் பலதையும் பரிமாறியுள்ளனர். பண்டைய மக்கள் அறிந்த விடயம் தற்போதைய ஆராய்ச்சி முடிவுகளும் ஆதரிக்கும் விடயமாகவுள்ளது. குறிப்பாக கர்ப்பமுற்றுள்ள தாய்கள் நல்-நுண்ணியிர் உணவுகள் உட்கொள்வதால் பிறக்கும் குழந்தைகள் பல் வேறு ஒவ்வாமை அல்லது கிரந்தி (Alergies) தவிர்க்கவும் வழிவகை செய்யும். மேலும் பெண்கள் சுகாதாரத்தைப் பொறுத்தளவில் நல் நுண்ணியிர் உணவுகள் உட்கொள்ளல் பல பயன்களையும் தரும். அது சிறுநீரப் பெருக்கு வியாதி (urinary track infection –UTI) தவிர்க்க உடலின் கார அமில (PH Balance) சமநிலையைப் பேணி உதவிகிறது.

நல் நுண்ணுயிர்கள் சார்ந்த உணவுப்பொருட்களை விலை அதிகமுள்ள மாத்திரைகளாகவும் வாங்கலாம் இல்லை நமது அன்றாட உணவுத் தயாரிப்புக்களிலும் மீழச் சேர்த்துக் கொள்ளலாம். எனவே நமது சான்றோர் தந்துள்ள பயனுள்ள உணவுப் பழக்க வழக்க முறைகளைப் பின்பற்றி நம்மையும் நமது குழந்தைகளின் சுகங்களையும் பராமரித்துக் கொள்வது வளமான வாழ்வுக்கு நலமான விடயமே.

உச்சாந்துணை :

1. PEDIATRICS Vol. 124 No. 2 August 1, 2009 pp. e172 -e179

(doi: 10.1542/peds.2008-2666)

  1. https://www.health.harvard.edu/flu-resource-center/how-to-boost-your-immune-system.htm

3. Italian Journal of Pediatrics 2013, 39:47

–          யோகி அருமைநாயகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad