\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வ(ச)ந்த காலம் மாற்றம்

Filed in இலக்கியம், கவிதை by on May 31, 2013 0 Comments

vasatham_288x288நேற்றைய மாலைப் பொழுதில்

என் வீட்டு முற்றத்தில் இரு சிறு குருவி

துளிர்விட்ட பசும்புல்லில் தீனி பொறுக்கி

குதூகலித்துக் கலவிகொண்டு மகிழ்ந்திருந்தன. .

வசந்தகாலத்தின் வரவுக்கண்டு

மரங்கள் குருத்தெறிந்து

மொட்டுவிட்டுக்  கருத்தரிக்க

கொட்டும் மழையில்

தலை கழுவிச் சீவி முடித்துச் சிங்காரித்து

அம்மணமாக நின்றன.

 

வீதியில் தொடை தெரிய

நடைப் பயணம் போனாள்  ஒரு யுவதி.

தெருமுனைப் பூங்காவில் குதூகலத்தில் சில சிறுவர்.

 

கடிகாரச் சிறு முள்ளின்

ஒரு வட்டச் சுற்றுக்குள் பெரு மாற்றம்

வெண்பனிப் போர்வைக்குள் உடல் புதைத்து

பதுங்கிக் கொண்டது பசுந்தரை

ஒளியும் இருளும் கலந்த எங்கள் நெடுஞ்சாலை

தொடர்ந்து பொழியும் வெண்பனியில்

கருஞ்சாயம் போக்கி

மீண்டும் வெண்துகில் போர்த்திய படி

நீட்டி நிமிர்ந்து நீளுறக்கம் கொண்டிருந்தது…

வசந்தத்தின் வருகைக்காய்க் காத்திருந்து

தோற்றுப்போன மரங்கள்

மீண்டும் பனிப்பூக்கள் சுமந்த படி அணிவகுத்து நின்றன.

 

அகதியாகிப் போன

இரு சிறு குருவி பற்றிய நினைவில் மிதந்தபடி

நான் மட்டும் தனியாக வெளிபார்த்து.

 

– தியா –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad