\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மைத்ரீ – சிநேகத்தின் சங்கீதம் (Maithree: The Music of Friendship)

இசை என்னும் தங்கச் சங்கலியால் உலக மக்கள் எல்லோரையும் இணைக்க முடியும் என்பது வெறும் கூற்றல்ல. அது  நிஜமாவதை நேரில் காண மினசோட்டா மக்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு. நம் மினசோட்டா வாழ் தமிழ் மக்களின் பெருமை வீணை விதூஷி நிர்மலா ராஜசேகர் என்றால் அது மிகை ஆகாது . அவரின் மைத்ரீ – சிநேகத்தின் சங்கீதம் (Maithree: The Music of Friendship)  “இசைத் தட்டு” வெளியீட்டு விழா அக்டோபர் 28 ஆம் தினம் தி சிடார் கல்ச்சுறல் சென்டரில்  நடைபெற உள்ளது.

! உலகமே. அமைதியை வளர்த்தெடு” என்னும் அர்த்தத்தை எடுத்துரைக்கும் ‘மைத்ரீம் பஜதா’பாடலை இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமி 1966-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் பாடினார் . இந்த சம்ஸ்கிருதப் பாடல் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளால் இயற்றப்பட்டதாகும். பொதுத் தோழமை மற்றும்  உலக அமைதிக்கான பாடலாக இது கருதப்படுகிறது. அதே மைத்ரீ என்னும் தலைப்பில் அதைப்போலவே ஒரு அக்டோபர்த் திங்களில் சங்கீதத்தால் ஸ்நேகத்தையும் சகோதரத்துவத்தையும் பரப்ப முற்பட்டுள்ளார் நமது நிர்மலா ராஜசேகர்.

சர்வதேச இசை அரங்குகளில் வீணையிசையைப் பரப்பியவர் நிர்மலா ராஜசேகர். கர்நாடக இசையில் இவர் தனி முத்திரை பதித்து வருகிறார்.  மேலும், அமெரிக்காவில்புஷ் பெல்லோஷிப் 2006 ‘ (Bush Fellowship 2006) என்ற மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை பெற்றுத் தந்தவர். வாய்ப்பாட்டிலும் சிறந்த இவர் தற்போது உலகம் முழுவதும் வீணையிசையைப் பரப்பி, கர்நாடக இசைக்குப் பெருமை சேர்க்கிறார். இந்த வருடம் அவர் The American Composers Forum என்ற அமைப்பின் வாரிய அதிகாரியாகவும் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்.

அக்டோபர் மாதம் 28ஆம் தேதி இன்னோவா ரெகார்டர்ஸின் தயாரிப்பில் மைத்ரீ என்னும் உன்னதமான இசைத் தட்டு வெளியீட்டு விழா நடக்க உள்ளது.   மைத்ரீ என்ற பெயருக்கு ஏற்றாற்போல் இது இசைக் கலைஞர்களை மட்டுமல்லாது இசைப் பிரியர்களையும் இணைக்கும் அன்புக்கரம்.  கலைஞர்கள் தங்கள் கலாச்சார வேறுபாடுகளை மறந்து, இசை என்னும் பொது இலக்கை நோக்கிப் பயணிப்பதுதான் இந்த விழாவின் மிகப் பெரிய சாதனை. இது நிர்மலா ராஜசேகரின் பெரும் உழைப்பின் விளைவே ஆகும்.

மைத்ரீ உருவான விதம் மிகவும் சுவையானது. தஞ்சாவூர் முருகபூபதி என்னும் மாபெரும் மிருதங்க வித்வான் மினசோட்டாவிற்கு இசை நிகழ்ச்சிக்காக வந்த நேரம் நிர்மலா அவர்கள் நட்பாக மிஷெல் கின்னே (செல்லோ) மற்றும் பேட் (கிளாரினெட்), டிம் (மேள வாத்தியம்) சகோதரர்களையும் இசையைப் பற்றிப் பேசி மற்றும் வாசித்து மகிழ அழைத்தார். அன்று சிறு பொறியாகப் புறப்பட்ட இசைதான்  இந்த இசை விழாவுக்கு வித்திட்டது.  மைத்ரீ இசைத் தட்டில் கர்நாடக சங்கீதம் மற்றும் ஐரிஷ், துருக்கி இசையும் கலந்த இசை அமைப்பைக் காண முடியும். இதில் பங்கேற்கும் ஒவ்வொரு கலைஞர்களும் தங்களது துறைகளில் முடி சூடா மன்னர்கள். இவர்கள் அனைவரும் முதல் முறையாக நம் மினசோட்டா “தி சீடர் ” அரங்கில் அக்டோபர் 28ஆம்  தேதி நம்முடன் இந்த இசையைப் பகிர உள்ளார்கள்.  வேறுபாடுகள் மறந்து ஒரே சமூகமாய் ஆதரித்து இந்த இசை விழாவை மாபெரும் வெற்றி விழாவாக ஆக்குவது மினசோட்டா மக்களின் கடமை.

இசை என்னும் உன்னதமான கருவியால் இணக்கமான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்னும் நிர்மலா ராஜசேகரின் ஆணித்தனமான நம்பிக்கையின் சான்றே மைத்ரீ.

Sunday, October 28, 2018

3:00 PM  6:00 PM

The Cedar Cultural Center

416 Cedar Avenue South Minneapolis, MN, 55454 United States

நிர்மலா ராஜசேகரைப் பற்றி அவர் நடத்தும் நாதராசா பள்ளியின் பெற்றோரான சுதாவின் சமர்ப்பணம்:

கலை வளர்க்கும் வாணிக்கு வணக்கம்


விரல்கள் தந்தியில் ஆடும் நடனம்
விரைந்து எழும் வீணையின் நாதம்

பண்ணுக்கு  வீணை உயிர் தரும்
பரம்பொருளும்  அதைச் செவி மடுக்கும்

இசையால்  மைத்ரீ மானுடத்தை வளர்க்கும்
இசைந்து உம் வீணை மாரியாய்ப் பொழியும்

மழையோ அளவாய்ப் பொழிந்தாலே ஆனந்தம் – உம்
மெல்லிசையோ வெள்ளமானாலும் வேட்கை பெருகும்

சிரிப்பில் குழைத்த சிந்து இனிக்கும்
சிறுபாமரனும் கட்டுண்டு அடைவான்  தஞ்சம்

உழைப்புக்கும்  ஊக்கத்திற்கும் தாமே உதாரணம்
ஊற்றெடுக்கும் இசையே உம் வளர்ச்சிக்கு அச்சாரம்

அருமருந்தாம் இசைக்குத் தேவை அருஞ்சாதகம்
அன்பாய் அறிவுறுத்தினீர் நிதம் தாமும்

மினசோட்டாவில் தாம்  போதிக்கும் நாதரசம்
மேதினியில் நாதமாய் நித்தம் ஒலிக்கும்

கற்பகம் அம்மாவின் தனி சந்ததி ஓங்கும்
கலை வளர்க்கும் எம் வாணிக்கு வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad