\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கடலலை

Filed in கதை, வார வெளியீடு by on March 3, 2020 0 Comments

இருள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையிலும் கடலையே வெறித்துப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த வயதானவரை, ”நேரமாகி விட்டது” என்று குழந்தைகளையும், தங்களுடைய கணவன்மார்களையும் இழுத்துக் கொண்டு சென்றவர்கள், வியப்பாய்ப் பார்த்துக் கொண்டு சென்றார்கள். ஒரு சிலர் பாவம் என்ற தோரணையில் கூடப் பார்த்துச் சென்றிருக்கலாம்.

மனிதக்கூட்டங்கள் தன்னை அதிசயமாய்ப் பார்த்துச் செல்வதையோ, இல்லை பாவமாய்ப் பார்த்துச் செல்வதையோ கண்டு கொள்ளும் மனோ நிலையில் பெரியவர் இல்லை.

இப்பொழுது பெரியவர் இன்னும் வரக்காணோம் என்று பதட்டப்பட்டு தேடுவோர் யாருமில்லை. காணாமல் போய் விட்டார் என்று கதவை இழுத்து மூடிக் கொள்ளத் தயாராய் இருக்கும் கூட்டத்தில் தான் போய்த்தான் சாதிக்க என்ன இருக்கிறது? இதை முன்னரே தெரிந்து, தன்னை விட்டுப் போய் விட்ட கமலாவைச் சபித்தார். கூடவே ஐம்பது வருடம் குப்பை கொட்டியும் அவள் குணம் தெரிந்து கொள்ளாமல் போய்விட்டதற்காகத் தன்னைச் சபித்துக் கொண்டார்.

தனக்காக ஒரு உயிர் காத்திருப்பு என்பது ஒரு மனிதனுக்குப் பலம் என்பது அவள் தன்னை விட்டுப் போய் விட்ட ஒரு வருடத்துக்குள் புரிந்து விட்ட ஆயாசம். பொங்கி வரும் கடலலைகள் ஆக்ரோசமாய் வந்து கரையில் மோதிச் செல்வதைப் பார்த்தால் குறைவது போல் தோன்றிக் கொண்டே இருக்கிறது. தான் மாதம் தவறாமல் பெற்றுக் கொண்டிருக்கும் ஓய்வுத் தொகையும், ஒரு சில சொத்துக்கள் மட்டுமே தன்னிடம் உறவுகளுக்கு இன்னும் எதிர்பார்ப்பாய் இருக்கிறது.

எத்தனை முறை பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுக்காத இந்த அலைகளின் ஆக்ரோசத்தைத் தனக்கு முன்னால் எத்தனையோ கோடி ஆண்டுகளாக ஜீவராசிகள் பார்த்துக் கொண்டுதான் இருந்திருக்க வேண்டும். அத்தனை கோடி ஆண்டுகளில் தானும் கூட ஒருவனாய் முற் பிறவியில் பார்த்து இரசித்தோ பயந்தோ போயிருக்கக் கூடும். இல்லை இதிலே விழுந்து மாய்ந்து போயிருக்கவும் கூடும். ஏன் இப்பொழுது கூட இவைகளைப் பார்க்கப் பார்க்க மனம் இதனுள்ளே போய்ப் பார்த்தால் என்ன என்று தானே தோன்றிக் கொண்டிருக்கிறது.

நன்கு இருட்டி விட்ட அந்த இருளில் சட்டெனத் தீக்குச்சி உரசும் சத்தமும், ஒரு தீப ஓளி தோன்றி புள்ளியான “கங்காக” மாறுவதையும் பார்த்தும் எந்த அசைவும் இல்லாமல் கடலலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.இப்பொழுது அந்த தீ “கங்கு” அருகில் நெருங்கி வருவதைப் பார்த்துக் கொண்டு இருந்தாலும் எந்த அசைவையும் காட்டாமல் இருந்தார்.

யாரு அது இந்த நேரத்துல?

கேள்வி கேட்டவனின் குரல் கடூரமாய் இல்லாவிட்டாலும் முதிர்ந்து இருப்பதை உணர்ந்து இருந்தார். மீண்டும் அந்தக் குரல் அவரை உசுப்பியது யார் இந்த நேரத்துல?

பெரியவர் இப்பொழுது யார் வேணும் உனக்கு? கேள்வி திரும்பியதில் சற்றுத் தடுமாறியவன்

மீண்டும் ஒரு தீக்குச்சியை உரசி அந்த வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தான். அந்த வெளிச்சத்திலேயே வந்தவனை இவரும் உற்றுப் பார்க்க, திடீரென்று வெடிச் சிரிப்பு அவனிடமிருந்து வெளிப்பட்டது.

என்ன பெரிசு, வீட்டுல கண்டுக்க மாட்டேங்கறாங்களா? அதான் கோச்சுக்கினு உக்காந்திருக்கறயா?

சாவதானமாய் வந்த கேள்வி இவருக்குச் சற்று சலனத்தைத் தர, மீண்டும் அவனே தொடர்ந்தான் விடு பெரிசு, ஒவ்வொருத்தனுக்கும் ஒரு கவலை, ம்…ம் பெருமூச்சு விட்டவன் இந்த மனுசங்களே இப்படித்தான். இதுல கட்டுனவளும் ஒண்ணுதான்  பிறந்தவங்களும் ஒண்ணுதான்.

அப்படி என்ன இந்த வயசுக்குள்ள வேதாந்த்த்தை கண்டுட்ட?  கேள்வி கேட்ட பெரியவரை ஆச்சர்யத்துடன் பார்த்தவன் என்ன பெரிசு இப்படிக் கேட்டுட்டே? இங்க ஒருத்தனுக்காச்சும் மனசாட்சி இருக்கான்னு சொல்லு பார்ப்போம். என் வீட்டுலயே எடுத்துக்க? உழைச்சுக் கொட்டுனேன் ஆத்தாளுக்கும், அப்பனுக்கும், அதுகளாச்சும் நன்றியோட இருந்துச்சா, நான் உழைச்சுக் கொட்டுன காசுல மத்தவனுங்களைத்தான் தாங்கு தாங்குன்னு தாங்குச்சுங்க. அதை வுடு, சம்சாரம் வந்துச்சு, அதுக பெத்த குழந்தைகளுக்கு உழைச்சுக் கொட்டுனேன், அதுக மட்டும் தாங்குச்சுங்களா?

இப்பப் பாரு வேலை செய்ய முடியலை, உடம்பு ஒத்துக்க மாட்டேங்குது, எனக்கு ஒருத்தனுக்கு சோறு போட இதுகளுக்கு முடிய மாட்டேங்குது. சும்மா தண்டத்துக்கு ஒக்காந்துக்கினிக்கிறான், அப்படீன்னு சொல்லிச் சொல்லிக் காட்டுதுங்க புள்ளைங்க. இதுக்கு அவ அம்மாளும் ஒத்து ஊதுது. நீயே சொல்லு பெரிசு, நான் உழைச்சு இதுகளுக்குத்தான கொட்டுனேன், அப்ப அப்ப கொஞ்சம் சாராயம் ஊத்துக்கினேன், ஒரு நாளைக்கு ஒரு கட்டு பீடி இழுத்துக்குவேன், இவ்வளவுதான், இதுல ஏதோ கொள்ளையே போனாப்பல சும்மாச் சும்மாச் சொல்லிக் காட்டிகிட்டு இருக்காளுங்க.

பெரியவரின் கவனம் கடலலைகளையும் மீறி இவன் எச்சில் தெறிக்கப் புலம்புவதைக் காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தது. தன்னையும் மீறிச் சிரித்து விட்டார். அவ்வளவுதான் அவனிடமிருந்து பெரும் சீற்றமாய் கேள்விகள் வந்தன.

என்னாத்துக்குச் சிரிக்கற? என்னையப் பார்த்தா எங்க ஊட்டாளுங்களுக்குக் கேனப்பயைனாத் தெரியறன்னா உனக்கும் நான் அப்படித்தான் தெரியறனா? இந்தா பாரு இந்த ராக்கி தள்ளு வண்டி இழுத்தான்னா மூணு டன் சாமானைக் கூட இழுப்பான், இப்ப மூச்சு இழுக்குதேன்னுதான் வண்டி இழுக்கப் போறதில்லை.

பெரியவர் அவனின் கோபத்துக்கெல்லாம் அசராமல் மீண்டும் சிரித்து நான் எண்பதுல புலம்பறதை நீ அம்பதுல புலம்பறே அவ்வளவுதான், சொல்லி மீண்டும் சிரித்தார்.

ஓ உனக்கும் அதான் பிரச்சினையா அதுதானே பார்த்தேன், பெரிசு இந்த உலகத்துல நல்லதுக்கெல்லாம் காலமில்லை, வயசு இருந்துச்சுன்னா எங்கியாவது ஓடிப்போயிப் புழைச்சுக்கலாம், கருமம் வயசும் போய்த் தொலைஞ்சு, இந்தப் பாடாவதிக கிட்ட சீரழியோணுமின்னு நமக்குத் தலை எழுத்து. புலம்பியவன் அப்படியே அந்த மணலில் படுத்து ஆகாயத்தை வெறித்தான்.

பெரிசு ஆகாசத்தைப் பாத்துக்கினியா ஒவ்வொரு நட்சத்திரமும் தனித்தனியாத்தான் இருக்கு, எங்கியாவது ஒட்டிக்கினு இருக்குதா? மனுசனுங்க மட்டும்தான் ஒட்டிக்கிணு இருக்கோம் ஒட்டிக்கிணு இருக்கோமுன்னு சொல்லி ஒருத்தனை ஒருத்தன் புறவாண்டி தெரியாமக் குத்திக்கிறானுங்க., நாம கூட செத்தா அங்க போயி இருந்துக்கணும்.

திடீரென்று நான்கைந்து பேர் நடந்து வரும் சத்தம் கேட்டது, உங்கப்பன் இங்கதாண்டா எங்கியாவது படுத்திருப்பான்,

இந்தக் குரலைக் கேட்டவுடன் விறுக்கென்று எழுந்தவன் என் வீட்டுக்காரி தேடி வந்துட்டான்னு நினைக்கிறேன், மெல்ல எழுந்து உட்கார்ந்தான்.

ஏய் மூதி சாராயம் குடிக்கக் காசு கொடுக்க முடியாதுன்னா இங்க வந்து படுத்திக்குவியா? அவனை எழுப்பித் தர தரவென இழுத்துச் சென்றனர்.

பெரியவர் கடலை மீண்டும் பார்க்க, கடலலைகள் தன்னுடைய வெண்மை நிறத்தைக் காண்பித்துச் சிரிப்பது போலத் தோன்றியது. நானும் இப்படித்தான் கரையில் வந்து தேடி மீண்டும் கடலுக்குள் போகிறேன். இப்படிச் சொல்வது போலத் தோன்றியது.

பெரியவர் மெல்ல எழுந்தார். மணி ஒன்பது இருக்கலாம், வீட்டுக்கு மெல்லப் போய் விடலாம், தடுமாறி ரோட்டுக்கு வந்தவர் அருகில் கார் வந்து நின்றது. தாத்தா எங்க போயிட்டீங்க? உங்களை எல்லாரும் தேடிக்கிட்டே இருக்காங்க, கதவைத் திறந்து கூவிக் கொண்டே ஒரு இளைஞன்.

தன்னையும் அறியாமல் திரும்பிக் கடலைப் பார்த்தார் பெரியவர். கடல் அலை மீண்டும் கடலுக்குள் சென்று கொண்டிருந்தது.

– தாமோதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad