\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

நானே சிந்திச்சேன் – கல்வியா? கைத்தொழிலா?

Filed in கதை, வார வெளியீடு by on October 30, 2023 0 Comments

நானே சிந்திச்சேன் – கல்வியா? கைத்தொழிலா?

ன்னதான் சொல்லு.. ‘டன்கின்ஸ்’ காஃபியை அடிச்சுக்க முடியாது மச்சி” – காபி கப்பை மேஜையில் வைத்துவிட்டு, ‘கிளேஸ்ட் டோனட்’ ஒன்றைப் பக்குவமாகப் பிடித்தபடி, பேச்சைத் தொடங்கினான் ஜனா.

“ஆமாமா.. அதுக்குத்தானே ‘அமெரிக்கா ரன்ஸ் ஆன் ‘டன்கின்ஸ்’ன்னு சொல்றாங்க..”

“எவன் அப்டி சொன்னது.. ‘டன்கின்ஸ்’ ரன்ஸ் ஆன் யூ.. நம்ப குஜ்ஜு ஆளுங்கதான் இந்த காஃபி சாம்ராஜ்யத்தையே கட்டி ஆளறாங்க.. குஜராத்துன்னு சொன்னதும் ஞாபகம் வருது.. இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் பாத்தியா? செம இண்ட்ரெஸ்டிங் கேம்…இல்ல?”

“இல்லடா.. எப்போ என் ‘தலைவி’ ‘டோபி கா குத்தா’ ன்னு இந்திய அணியைச் சொன்னாங்களோ அன்னிலேந்து கிரிக்கெட் பாக்கறதயே விட்டுட்டேன்..”

“யாரு, சந்திரமுகி-ரெண்டா? அதெல்லாம் சும்மா ஒரு வேகத்துல சொல்றதுதான்.. அதுவுமில்லாம ‘குத்தா’ ன்னா நாய் மட்டும் கிடையாது.. துணி தோய்க்கிற கட்டைன்னு கூட அர்த்தமிருக்காம்..   சரி அத விடு.. சொல்லு, காபியெல்லாம் வாங்கி குடுத்து பேசப்போறன்னா மேட்டர் கொஞ்சம் முக்கியமா தான் இருக்கும்..”

“ஆமாடா.. என் தங்கை பொண்ணு, மதுரைல பன்னிரெண்டாவது முடிக்கப் போறா.. மெடிக்கல் படிக்கணும்னு சொல்றாளாம்.. இப்பதான் நீட் அது இதுன்னு சொல்றாங்களே .. அதான் உன்கிட்ட வெவரம் கேக்கலாம்னு..”

“நிறுத்து.. கேக்கறேனேன்னு தப்பா நெனச்சுக்காதே.. மெடிசின் தான் படிக்கணுமாமா? ஏண்டா, எல்லாருமே டாக்டராயிட்டா, கம்பவுண்டர் வேலையெல்லாம் யாரு செய்யறது?”

“என்னடா இப்படி கேனத்தனமா கேக்கற?”

“கேனத்தனமா? கொஞ்ச நாளைக்கு முன்ன எங்க அண்ணன் பேசுனத கேட்டல்ல.. ‘தெரு முழுக்க டாக்டருங்க ஆஸ்பத்திரி வெச்சிருக்காங்க..  எல்லாரும் டாக்டராயிட்டா, ஒருத்தனுக்கொருத்தன் மாத்தி மாத்தி ஊசி போட்டுக்குவானுங்களா’ ன்னு கேட்டதும் அங்கருந்த டம்மிங்கெல்லாம். ச்சீ…  தம்பிங்கெல்லாம் கைதட்டினத பாத்திருக்கணும் நீ.. “

“என்னது? கைதட்னாங்களா? யாரு?”

“எல்லாம் ‘ஒறவு’காரனுவ தான்.. அதுமட்டுமில்ல ‘ஐயா, தூண்டில கண்டுபிடிச்சவன் எந்தக் கல்லூரியிலும் படிக்கலைய்யா.. ஏர்கலைப்பையைக் கண்டுபிடிச்ச விஞ்ஞானி எந்தப் பட்டமும் வாங்கலைய்யா..’ ன்னு ரைமிங்கா பேசினத கேக்கும்போதே அப்டியே ஜிவ்வுனு ஏறுச்சு”

“வாஸ்தவந்தானே.. இந்த மாதிரி பேச்சைக் கேட்டா கோவம் வரத்தானே செய்யும்?”

“கோவமா .. ஆர்கஸம் மச்சி.. ஆர்கஸம்! இன்னொரு எடத்துல சொன்னாரு பாரு.. ‘படிப்பு வரலையா? ஊர் சுத்தணும் தோணுதா? போடா.. ஊட்டி கொடைக்கானல் குன்னூரு ஏற்காடு கீற்காடுன்னு போடா.. வெளிநாட்டுலருந்து பயணிங்க வருவாங்க இல்லடா? அவங்களுக்கு நீ தாண்டா டூரிஸ்டு கைடு, உனுக்கு மாசம் ஒரு லட்சம் சம்பளம்டா.. போடா.. ஏன் என் புள்ளைங்கள போட்டு கொல்ற? படிக்க வந்தா காலைல உப்புமா போடற.. என் புள்ள ஏன் அத சாப்புடணும்.. நீ சாப்பிட்றா .. முட்ட, கோழின்னு சாப்புட்றா.. எவ்வளவு பாலு வேணாலும் குடிடா.. நான் தான் பண்ணை வெச்சிருக்கனே.. ஓட்றா, வெளயாட்றா.. மாடு மேச்சு கொண்டு வந்து கட்டுடா.. மாடு சாணி போடுதா.. ‘வேக்வம் க்ளீனர்’ வெச்சு சரக், சரக்னு வழிச்சி வண்டில போடணும்.. நோ நீட் எஜுகேஷன்.. பூரா படிக்காதவனுக்கும் அரசு வேலை’ ன்னு சொன்னாரு பாரு, மொத்த ‘ஒறவும்’ எழுந்து நின்னு கையத் தட்டி, கொண்டாடித் தள்ளிடுச்சு.. “

 

“டேய்.. டேய்… இந்த நீட்டு, க்யூட்டுன்னு எதேதோ சொல்றாங்களே, அதப்பத்தி கேக்கலாம்னு நெனச்சா நீ படிக்கவே வேணாம்னு சொல்ற? சரி விடு.. சாயந்திரமா நான் வரது கிட்ட கேட்டுப் பாக்கறேன்..”

“கேளு.. கேட்டுப்பாரு.. இந்தியாவுல இப்ப இதாம் மச்சி டிரெண்ட்.. படிக்காம எத்தினியோ பேரு என்னென்னவோ சாதிச்சிருக்காங்க தெரியுமா? எம்ஜிஆரு, சிவாஜி, சூப்பர் ஸ்டாரு, உலக நாயகன்னு யாருமே படிச்சதில்ல .. மியூசிக் எடுத்துக்கிறியா, எம்எஸ்வி, இளையராஜா, ஏஆர்ஆரு ஒருத்தரும் ஹைஸ்கூல் பக்கம் போனதில்ல.. அவுங்கல்லாம் சாதிக்கலையா? அதத்தான் அண்ணன் கூட சொன்னாரு, ‘விஜய் டிவில பாடற கொழந்தங்களப் பாரு.. அத்தனையும் தெறம.. அத வீணடிச்சிட்டு, படிக்கப் போ படிக்கப் போன்னு சொன்னா.. அவுங்க தெறமைய மழுங்கடிக்கறியா நீயு?’ ன்னு ஒவ்வொரு கேள்வியையும் ஷார்ப்பா அள்ளி வீசுறாரு… சிந்திக்கணும்.. நீ சிந்திக்கணும்.”

“இல்ல வேணாம்.. என்ன ப்ரெய்ன் வாஷ் பண்ணாத .. வரது கிட்ட பேசிக்கறேன்..”

“பேசு மச்சி.. இப்பவே பேசு.. அவனும் இதயே தான் சொல்லுவான்..”

ரண்டாவது முறை அழைத்தபோது, வரது ஃபோனை எடுத்தான்..

“சொல்லுங்கடா.. விஷயமில்லாம கூப்பிட மாட்டீங்களே.. எதும் பஞ்சாயத்தா?”

“ஆமாம் மச்சி.. நம்பாளுக்கு நாட்டு நடப்பெதுவும் தெரிய மாட்டேங்குது.. நான் சொன்னா நம்ப மாட்டேங்குறான்” என்று முழு விவரங்களையும் சொன்னான் ஜனா. ஸ்பீக்கர் போட்டிருந்ததால் வரது , ‘உம்.. ஆமாமாம்..’ என்று சொல்லி முழுக்கதையையும் கேட்ட பிறகு மெதுவே தொடங்கினான்.

“டேய் வோல்ட்டு.. ஜனா சொன்னதெல்லாம் சரி தான்.. நீட்டு, நீட்டுனு பேரண்ட்ஸ் தான் கொழந்தங்கள ‘புஷ்’ பண்ணிக்கிட்டிருக்காங்க.. கடைசில பேரண்ட்ஸ் டார்ச்சர் பொறுக்க முடியாம அதுங்க தற்கொலை பண்ணிக்குதுங்க.. இதுல பாத்தினா சர்க்காரோட நோக்கம் நல்ல நோக்கம் தான்.. ‘குவாலிட்டி டாக்டர்ஸ்’ வரணும்னு பாக்கறாங்க”

“இல்லடா.. +2ல 90% எடுத்துட்டு நீட்ல 91% எடுத்த பையனுக்கு சீட் கெடக்கலை.. ஆனா +2ல 61% எடுத்துட்டு, நீட்ல 95% எடுத்தவனுக்கு சீட் கெடைக்குது.. அதான் கேக்கறேன்.. இங்க ‘எம்கேட்’ ல இருக்கிற மாதிரி ‘அக்ரிகேட் ஸ்கோர்’ எடுக்கறதில்லையா அங்க?”

“இல்ல மச்சி .. ஒண்ணு புரிஞ்சுக்கோ.. இந்தியால இருக்கிற பாபுலேஷணுக்கு கொஞ்சம் காம்பெடிடிவா தான் இருக்கணும்.. 67 வருஷமா போட்டு நாசப்படுத்தி வெச்சிருந்தானுங்க.. ஏழெட்டு வர்ஷத்தல ‘ரீஃபார்ம்’ பண்ணிட முடியுமா சொல்லு? ‘குவாலிட்டி டாக்டர்ஸ்’.. அத மனசில வெச்சிகிட்டு தான் இந்த எக்ஸாம்லாம் வந்திருக்கு.. அப்டியே எம்புள்ளய  டாக்டாராக்கி தான் தீருவேன்னு நெனக்கிறவங்களுக்கு எத்தினியோ கோச்சிங் செண்டர்ஸ் இருக்கு. அதுல சேத்து படிக்க வெக்கணும்..”

“அதான் கேக்கலாம்னு நெனச்சேன்.. எல்லா கோச்சிங் செண்டர்லயும் லட்சக்கணக்குல கேக்குறாங்களாமே..”

“ஆமா.. டாக்டராயிட்டு கோடி கோடியா சம்பாதிக்கப் போகுது உன் புள்ள.. கோச்சிங் ஃபீஸு கட்றதுக்கு நோவுதா உனுக்கு? முன்னாடி மாதிரி +2 மார்க்கை வெச்சிகிட்டு ப்ரைவேட் காலேஜுல ‘கேபிடேஷன்.. டெவலப்மெண்ட் ஃபீஸு’னு  கட்டிட்டு சேருவே இல்ல.. இப்ப அப்டி கிடையாது.. ‘குவாலிட்டி டாக்டர்ஸ்’ க்கு தேவையான சரியான கோச்சிங்.. அதுக்குதான் அந்த ஃபீஸு”

“ஆனா இந்த ‘கோச்சிங்’ ‘மெடிசின்’ சம்பந்தப்பட்டது கெடையாதே .. ‘எண்ட்ரன்ஸ் டெஸ்ட்’ல ஸ்கோர் பண்றதுக்குத் தானே இந்த ‘கோச்சிங்’ குடுக்கறாங்க..”

“கரெக்ட்.. நீ +2 வரைக்கும் படிச்சத மறுபடியும் மொத்தமா நினைவு படுத்தி உன்ன தயாராக்கிறது தான் இந்த ‘கோச்சிங்’..”

“அதுக்கு +2 மார்க்கையும் சேத்து ‘ஆவரெஜ்’ பண்ணா போதுமே.. எதுக்கு இப்டி ஒரு ‘எண்ட்ரன்ஸ்’ கொடும?”

“திரும்பத் திரும்ப அதே எடத்துக்கு வந்து நிக்காத.. ‘குவாலிட்டி டாக்டர்ஸ்’ அதான் குறிக்கோள் புரியுதா?”

“ஆனாலும் பிரைவேட் ஸ்கூல்ல  ‘நீட் கட் ஆஃபை’ விட குறைவா இருந்தாலும் சேத்துக்கறாங்களாமே?”

“ஏன் நீட் வர்றதுக்கு முன்னாடி 70 வர்ஷமா பிரைவேட் காலஜ்ல லஞ்சம் வாங்கிட்டு சேத்துகிட்டது கிடையாதா?”

“அது கரெக்டுதான்.. அதே நெலம இன்னைக்கும் தொடருதுன்னா இந்த நீட் எதுக்குன்னு தான் புரியல”

“வோல்ட்டு.. சொன்னா புரிஞ்சுக்கோடா ‘குவாலிட்டி டாக்டர்ஸ்’.. அது மட்டும் தான் ‘எய்ம்’..வல்லரசாகறதுக்கு அதுதான் தேவை..”

“ஆனா, ‘பிஜி கோர்ஸ்’க்கு நீட் கட் ஆஃப் ‘ஜீரோ பெர்சண்டைல்’னு வெச்சுட்டாங்களாமே .. ‘பெர்சண்டேஜ்’ கூட இல்ல, ‘பெர்சண்டைல்’.. அப்டி பாத்தா நீட்ல நெகடிவ் மார்க் எடுத்தவனெல்லாம் எம்டி, எம்ஸ்னு சேரலாமில்லயா?”

“அது வந்து.. மெடிசின் பிஜி கோர்ஸ்ல 1 லட்சத்து 60 ஆயிரம் சீட்டு இருக்குது.. அதெல்லாம் ஃபில் ஆக மாட்டேங்குதுன்னு ‘பிரதர் மவுண்டன்’ சொன்னாரு கேட்டல்ல”

“அது வழக்கம் போல தப்பான ஸ்டேடிக்ஸ் சொல்லிருக்காரு.. இந்தியால மொத்த மருத்துவ மேற்படிப்புக்கு  68000 சீட் தான் இருக்குதுதாமா.. அவர மாதிரியே நீயும் பீலால்லாம் விடக்கூடாது..”

“ஜனா .. இந்த வோல்ட்டு மண்டைல நல்லா ஒரு குட்டு வைடா.. புரியாமலே பேசிக்கிட்டிருக்கான்..” என்றான் வரது.

“சொல்லிப் பாத்துட்டேன் மச்சி .. படிப்பே தேவையில்லடா.. அண்ணன அதிபராக்கிட்டா போதும்.. நீட்டுக்குப் பூட்டு .. எல்லா  படிக்காதவனுக்கும் அரசு உத்தியோகம் .. லட்ச ரூபா சம்பளம்.. அதையாவது செய்யுடான்னா அதுக்கும் நொட்ட சொல்றான்..” என்றான் ஜனா.

“டேய் வோல்ட்டு.. நீ பிக்பாஸ் பாக்கிறியா இல்லையா.. அதுல உன்ன மாதிரி தான் ‘மடிப்பு அம்சா’ மாமி, படிப்பு தான் முக்கியம்னு சொல்லிட்டு, நாட்டாம பேத்தியாமே .. அந்த சின்ன பாப்பாகிட்ட செமயா ‘நோஸ் கட்’ வாங்கிடுச்சி .. ரொம்பப் பிரபலமான இலக்கியவாதி ஒர்த்தரு, அந்தப் பாப்பாவைப் பாராட்டித் தள்ளிட்டாரு.. உலக நாயகன் வேற , ‘ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும்; பூசாத மாதிரியும் இருக்கணும்’ங்கிற பாணில பஞ்சாயத்து சொல்லிட்டாரு..”

“அதச் சொல்ல மறந்துட்டேன் பாரு நான்.. வோல்ட்டு தான் உலக நாயகன் ஃபேன் ஆச்சே, அவரு சொன்னா கேட்டுக்குவான்.. அவரே படிக்காத மேதைதான?” என்று ‘கெளசிக்’ கணக்காய் குறுக்கே வந்தான் ஜனா.

“காமராஜர தானே படிக்காத மேதைன்னு சொல்லுவாங்க?” என்று அப்பாவியாய்க் கேட்டேன் நான்.

சில நொடிகள் பதிலேதும் பேசாமல் என்னை வெறித்துப் பார்த்த ஜனா, ஃபோனைக் கையிலெடுத்து “மச்சி முடியலடா என்னால” என்று வரதவிடம் புலம்பினான்.

“சரிடா வோல்ட்டு.. உனுக்கு தமிழர்களையும், ‘ஒறவு’களையும் புடிக்காம இருக்கலாம்.. உன் ஃபேவரிட்டு ஆளு.. ‘தந்தி’லேருந்து வந்த மூத்த பத்திரிக்கையாளர் ‘ரங்கு’ சொல்லிருக்காரே கேட்டதில்ல நீயு? இப்போ நீ படிச்சிட்டு வேலைக்கு போறன்னு வெச்சுக்கோ.. உன் ஃபிரெண்ட்ஸெல்லாம் ‘மாப்ள கொடைக்கானல் டூரு போறோம் வர்றியா’ன்னு கேட்டாக்க, நீ உன் மேனஜர்ட்ட போயி லீவுக்குத் தொங்கணும்.. இதே நீ ஒரு பொட்டிக்கடை வெச்சிருக்கன்னு வையி… ஒரு பூட்ட மாட்டிட்டு ஜாலியா டூர் போலாம்.. அந்தளவுக்கு லிபர்ட்டி இருக்கு.. லட்ச லட்சமா பணத்தக் கட்டி எதுக்கு கஷ்டப்பட்டு படிக்கணும்.. அதான் சர்க்காரே  உங்க முன்னோர் பாத்த தொழில் தொடங்க லட்சக்கணக்குல கடன் தருதே அத வாங்கி தொழில் தொடங்கு.. ‘ஆத்ம நிர்பார்’, ‘விஷ்வ கர்மா’ன்னு ஏகப்பட்டது இருக்கு.. உன் தங்கை வீட்டுக்காரரு என்ன பண்றாரு?”

“டெய்லர் கடை வெச்சிருக்காரு..”

“யதேஷ்டம்.. ஒடனே பக்கத்துல இருக்கிற பேங்குக்குப் போயி டெய்லர் கடை லோனுக்கு அப்ளை பண்ண சொல்லு.. “

“அட அப்டியா? அப்போ அவளுக்கு ‘பொட்டிக் ஷாப்’ வெக்கறதுக்கு இந்த லோனை யூஸ் பண்ணிக்கலாமா?”

“செல்லாது, செல்லாது.. அவங்கப்பா பண்ற தொழிலுக்குத் தான் லோன்.. லாஜிக் என்னன்னா, அவங்கப்பா காலங்காலமா டெய்லர் தொழில் செஞ்சிக்கிட்டிருக்கிறதால அவருக்கு செம எக்ஸ்பீரியன்ஸ் இருக்கும்.. அத அப்டியே பொண்ணுக்குச் சொல்லித் தர ஏதுவா இருக்குமில்ல.. தொழில் சீக்கிரம் டெவலப் ஆகி செமத்தியா போகும்.. அத விட்டுட்டு, நீட்டு, டாக்டர்னு கனவெல்லாம் காண வெக்காதே.. ரொம்ப ரிஸ்கு. சிந்திச்சுப் பாரு, புரியும்.”

  • வோல்டெய்ர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad