\n"; } ?>
Top Ad
banner ad

பானு டீச்சர்

பானு டீச்சர் – எல்லோரையும் தலை நிமிர்ந்து பார்க்கவைத்த ஒரு நபர். ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்கிற இலக்கணம் வகுத்தவர் என்றால் அது டாக்டர் ராதாகிருஷ்ணன் என எல்லோரும் சுலபமாக சொல்லிவிடுவார்கள். ஆனால் ஒருஆசிரியை எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை புதியதாக வகுத்துக்கொண்டு இருப்பவர் பானு டீச்சர் என்றுதான் அங்கு இருப்பவர்கள் சொல்வார்கள்.

ஒரு நடிகர் எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் , என்ன அடை மொழி வைத்துக் கொண்டாலும் , பொது மக்கள் பேசும் போது, ” அவன் , இவன் ” என்று தான் சொல்லுவார்களே தவிர ” அவர் , இவர் ” என்று பேச மாட்டார்கள். பணம் அவர்களுக்கு எவ்வித மரியாதையையும் கொடுப்பதில்லை. ஆனால் ஆசிரியர்கள் அப்படி இல்லை. பணமே இல்லை என்றாலும் , ஆசிரியர்களுக்கு எல்லா இடத்திலும் ,மக்களாலும் மரியாதையாக அழைக்கப் படுபவர்கள். இது ஆசிரியர்களுக்கு இச் சமுகம் செய்யும் மரியாதை.

அதிலும் பானு டீச்சருக்கு இன்னமும் தனி மரியாதை. பானு டீச்சரைப் பொறுத்தவரை , எல்லோரும் , எல்லா இடங்களிலும் , அவர்கள் இருந்தாலும் இல்லை என்றாலும், ஆசிரியர்கள் உட்பட ”  பானு டீச்சர் ” என்றுதான் அழைப்பார்கள்.

அப்படிப்பட்ட பானு டீச்சருக்கு இப்படி ஒரு சோதனை வருமென்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. அதுவும் அன்று மாலை வகுப்பு முடியும் நேரம் . ஒரு காவல் துறை வாகனம் பள்ளிக்குள் வந்தது. சில நிமிடங்களில் தலைமை ஆசிரியரிடமிருந்து பானு டீச்சருக்கு அவசர அழைப்பு.

சாதாரணமாகத்தான் பானு டீச்சர் சென்றார்.ஆனால் எதிர்பார்க்காத விபரீத செய்தியை பானு டீச்சர் சந்திக்க வேண்டியிருந்தது. அது சுனாமியை விட அதிக தாக்கத்தை அவருள் ஏற்படுத்தியது.

“நீங்கள் திட்டியதால் ஒரு மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு எங்களுக்கு அங்கிருந்து புகார் வந்துள்ளது. விசாரனைக்காக நீங்கள் உடனே ஸ்டேஷன் வர வேண்டும்.” காவலர் ஒருவர் சாதாரணமாக ஆனால் கண்டிப்பாக பேசினார்.

தலைமையாசிரியர் அவர்களிடம் பேசிப் பார்த்தார் . அவரது பேச்சி எதுவும் எடுபட வில்லை. அதற்குள் விஷயம் பரவ , ஆசிரியர்கள் , மாணவர்கள் என எல்லோரும் கூடிவிட்டனர். பானு டீச்சருக்காக பல ஆசிரியர்கள் வந்திருந்த காவலர்களிடம் பேசினர்.யார் பேசினாலும் பயன் ஏதும் இல்லை.முடிவாக பானு டீச்சருடன் தலைமை ஆசிரியர் உட்பட பல ஆசிரியர்களும் உடன் சென்றனர்.

காவல் நிலையம். எல்லோருக்கும் புது அனுபவம். பள்ளிக்குள் தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழையும் போது காவலர் காட்டிய மரியாதை ,பௌவியம் எல்லாம் காற்றில் பறந்தது. தலைமை ஆசிரியரைக்கூட யாரும் உட்காரச் சொல்லவில்லை. பானு டீச்சரின்.. கணவர் வியர்க்க வியர்க்க ஓடோடி வந்தார். வந்து என்ன பயன்? ” நில்லுங்க சார். அந்த அம்மாவை இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார்.” ஒரு காவலாளி சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் சென்றார்.

“எழுத்தர் வர வேண்டும், காத்திருங்கள். இப்ப இருக்கிற அறிவு பசங்களை திட்டுவதற்கு முன்பு இருக்க வேண்டும். ” ஒருகாவலாளி தலைமை ஆசிரியரைப் பார்த்து கமென்ட் அடித்தார்.

எதற்கும் பதில் பேசாமல் தலைமை ஆசிரியர் உட்பட அனைவரும் மௌனம் காத்தனர். சிறிது நேரத்தில் எழுத்தர் வந்தார். வந்தவர் , இவர்கள் வாங்கித்தந்த பேப்பரில் எழுத ஆரம்பித்தார். ஆதார் அட்டையின் விபரங்களே குறைவு எனும் அளவிற்கு ஒரு தீவிர வாதியை நடத்துவதுப்போல் துருவி துருவி கேள்விகளைக் கேட்டார்.

“இதுங்க எல்லாம் , பிள்ளையை பெத்திருந்தாதானே பிள்ளைகளின் அருமைத்தெரியும்.” ஒருகாவலர் பேசிய இந்தப் பேச்சி, பானு டீச்சரை மட்டுமல்ல, அத்துணை பேரையும் கோபப்படவும், தலை குனியவும் வைத்தது.

“வெந்தபுண்ணில் வேல் பாச்சியதுபோல்” அதன் வேதனையை பானு டீச்சர் முழுமையாக உணர்ந்தார்.

அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

பானு டீச்சருக்கு குழந்தை இல்லை. அதற்கான மருத்துவ முயற்சியை எடுக்கலாம் என கணவரும் , உடன் இருந்த ஆசிரியர்களும் , உறவினர்களும் பல ஆண்டுகளாக கெஞ்சி விட்டனர் . பானு டீச்சர் எதற்கும் சம்பாதிக்க வில்லை . “நான் டீச்சர் . எனக்கு ஆண்டவன் இந்தனை பிள்ளைகளை கொடுத்துள்ளான். எல்லா பிள்ளைகளும் என்னை ஒரு டீச்சர் எனப் பார்க்கவில்லை. எல்லோரும் என்னை ஒரு அம்மாவாகத்தான் பார்க்கிறார்கள். நானும் அவர்களை என் பிள்ளைகளாகத்தான் பார்க்கிறேன். எனக்கு என ஒரு பிள்ளை பிறந்துவிட்டால் , இவ்வளவு பிள்ளைகளுக்கு அம்மா எனும் எனது இந்த சுகம் போய்விடும் . நானும் என்குழந்தை, என் குடும்பம் என மாறிவிடுவேன். எனக்கு அந்த மாற்றம் தேவையில்லை. அனைத்து குழந்தைகளுக்கும் அம்மாவாகவே இருக்க ஆசைப்படுகிறேன்.” என தீர்க்கமாக கூறிவிட்டார். அதற்குமேல் அவர் கணவரால், உடன் வேலை செய்யும் ஆசிரியர்களால் ஒன்றும் பேச முடியவில்லை. பெண்மையை மதிக்கத் தெரிந்த அவரின் கணவரும் பானுவின் முடிவிற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

இப்படிப்பட்ட பானு டீச்சர், ஒட்டு மொத்த குழந்தைகளின் அம்மா, இப்படி குற்றம் சாட்டப்பட்டு, காவலர்களின் ஏளன பேச்சிக்கு ஆளாகி நிற்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பானு டீச்சர் பதில் பேசியதைவிட அழுததே அதிகம் எனலாம். இந்த இடைப்பட்ட நேரத்தில் பள்ளியின் பெரும்பாலான ஆசிரியர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.  தலைமை ஆசிரியர் முதல் பல ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்த முறையில் பானு டீச்சரை வெளியே கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டனர். அதில் சிறிது பலனும் கிடைத்தது எனலாம்.                                                                                                                                                                      ..

பள்ளி ஆசிரியர்களும் தங்கள் பங்கிற்கு முடிந்தவரை தொடர்ந்து காவல் துறையினருக்கு தேவையான அழுத்தங்களை கொடுத்து வந்தனர்.” சம்பந்தப்பட்ட பெண் பிழைக்கவேண்டும். அப்பொழுதுதான் சுலபமாக தப்பிக்க முடியும். அனைத்து வழக்கிலுமிருந்தும் பானு டீச்சரை விடுவிக்க முடியுமென்பதை காவல் துறையினர் கூறி விட்டனர்.”

பானு டீச்சரின் கணவருக்கு ஒரே ஆச்சரியம் . தான் கேட்காமலே தன் மனைவிக்கு ஒட்டு மொத்த பள்ளியும் தன் மனைவிக்காக இப்படி போராடுவதும் , பாது காப்பதும் ஒரு அதிசயமாக இருந்தது. இவ்வளவு நாள் , மனைவியின் முயற்சியை , கிண்டல் செய்தவர் அந்த உழைப்பிற்கு கிடைத்த பரிசாகவே இதனை எடுத்துக்கொண்டார்.

பானு டீச்சர் ஒரு பெண் என்பதாலும் , இரவில் காவல் நிலையத்தில் தங்க வைப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டும் , அருகில் பெண் காவல் நிலையம் இல்லாததாலும் , தொடர்ந்து பலர் பானு டீச்சருக்காக அழுத்தம் தந்ததாலும், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமை குறித்து காவல் துறையினர் கேட்டனர். பெண்ணின் உயிருக்கு ஆபத்து இருக்காது எனத் தெரிந்ததால் , மறுநாள் காலை வரவேண்டுமென்ற கட்டாயத்துடன் பள்ளி நிர்வாகம் தானாக முன்வந்து முன் ஜாமீன் தந்தாலும் , தலைமையாசிரியர் உட்பட முக்கிய ஆசிரியர்களிடம் ஜாமீன் கையெழுத்து வாங்கிக்கொண்டு பானு டீச்சரை விடுவித்தனர்.

அவ்வளவு நேரம் அமைதி காத்த பானுவின் கணவர், பானுவின் தோளில் கைப்போட்டு அருகில் அமர்ந்தார். பானு அவரை கட்டிப்பிடித்து அழ, கண்களை துடைத்து விட்டவர் ” அழாதே பானு , நீ தப்பு செய்யல, செய்யவும் மாட்டே, நானிருக்கேன், பாத்துக்கலாம்” என்று மட்டும் சொல்லிவிட்டு உடனே எழுந்துவிட்டார். அவருக்குத் தெரியும். அதற்குமேல் அங்கிருந்தால் அது பானுவை கோழையாக்கிவிடுமென.

பானு டீச்சருக்கும் மற்ற டீச்சர்களுக்கும் அடிப்படையில் பல வேறுபாடுகள் உண்டு. பானு டீச்சர் பாடம் மட்டும் நடத்த மாட்டார். பசங்கள் வழக்கத்திற்கு மாறாக இருந்தால் , அல்லது செயல்பட்டால் உடனே பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு சம்பத்தப்பட்ட மாணவ / மாணவியை அழைத்து விசாரிப்பார். வீட்டு பிரச்சனையாக இருந்தாலும் அவர்கள் பெற்றோர்களை அழைத்துப் பேசுவார். உடல் ரீதியாகவோ , மன ரீதியாகயோ தன் பசங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அதில் தான் அவரது முழு கவனமும் செல்லும்.

பல டீச்சர்கள் பானு டீச்சரிடம் ” ஏன் இந்த வீண் வம்மு”? எனக் கேட்டது உண்டு. பானு டீச்சரின் பதில் எல்லோருக்கும் இதுதான். ” நாம் முறையான ஆசிரியர்களாக செயல் பட்டால் , இந்த நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைகள் நடக்காது ” என்பதுதான்.

இப்படிப்பட்ட பானு டீச்சர் தான் இன்று, கொலை முயற்சி பழியோடு மனமுடைந்து, தன்னை இழந்து செய்வதறியாமல் , இரவு முழுவதும் தூக்கம் மறந்து , சிறகுகளும் , கால்களும் ஒருசேர வெட்டப்பட்ட பறவையாய் உயிரை மட்டும் சுமந்துக்கொண்டு மூலையில் முடங்கிப்போனார். எல்லோரும் பானு டீச்சரிடம் பேசிப் பார்த்தார்கள். எவ்வித பலனும் இல்லை. அழுகையையைத் தவிர வேறு எதையும் பானு டீச்சரிடம் பதிலாகப் பெற முடியவில்லை இரவுமுழுவதும் பானுடீச்சர் சொட்டு தண்ணீர் கூட குடிக்கவில்லை..

எல்லோரும் போராடி , கெஞ்சி முடிந்தவரை முயற்சி செய்து விட்டனர். எந்த பலனும் இல்லை.பட்டினியால் இருந்தது பானு டீச்சர் மட்டுமல்ல. பானு டீச்சரின் கணவர் , அங்கு தங்கி இருந்த ஆசிரியர்கள் , பானு டீச்சரை பார்க்க வந்த மாணவர்கள் , அவர்களின் பெற்றோர் என இந்த பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். ஆசிரியர்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த பள்ளி மாணவ, மாணவிகளும் பானு டீச்சருக்கு ஆதரவாக வீட்டைச் சுற்றி தஞ்சமடைந்தனர்.

விடியும்முன் பானு டீச்சரின் கதவை தட்டியது செய்தித்தாள்.

“டீச்சர் திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி” எல்லா செய்தித்தாள்களிலும் தலைப்புச் செய்தி இதுதான்.பானு டீச்சருக்கு கோபத்தாலும், பயத்தாலும் இதயம் படபடத்தது. மீண்டும் ஒரு குளியல். இம்முறை வியர்வையால்.

பள்ளியில் எல்லோரும் பானு டீச்சரை கிண்டல் செய்வதுண்டு. என்றாவது ஒருநாள் பானு டீச்சருக்கு எதிராக மாணவ,மாணவிகளும் பெற்றோரும் போராடப்போகிறார்கள் என்பார்கள் கிண்டலாக. காரணம் பானு டீச்சருக்கு கோபமாக பேசத் தெரியாது. பசங்க எவ்வளவு தப்பு செய்தாலும் அன்பாக , ஒரு அம்மாவைப்போல், உடன் பிறந்த அக்காவைப்போல் மெதுவாக எடுத்துச் சொல்லி திருத்தும் பழக்கம் உண்டு. எப்பொழுதும் பசங்க தோள்மேல் கைப்போட்டு அரவணைத்து செல்லும் ஒரே டீச்சர் பானு டீச்சர் தான். எனவேதான் யாருக்குமில்லாத தனி மரியாதை பானு டீச்சருக்கு மற்றவர்கள் மத்தியில். மாணவர்கள், மாணவிகள் , டீச்சர்கள் என அத்துனைப்பேரும் ஆள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பானுவை மட்டும் தான் பானு டீச்சர் என்று அழைப்பார்கள். டீச்சர்கள் விளையாட்டாக, கிண்டலாக பேசியது இவ்வளவு சீக்கிரம் வினையாக வந்துவிடும் என பானு டீச்சர் எதிர்பார்க்கவில்லை.

“நான் தவறு செய்யவில்லை. தவறு செய்பவர்களை அன்பாய் திருத்துகிறேன். எதற்காக  பயப்பட வேண்டும். இது என் கடமை” என்றெல்லாம் மனதிற்குள் வீர வசனம் பேசிய பானு ,நிலைத் தடுமாறி செய்வதறியாமல் நடை பிணமாய் நேற்று இரவு முதல் மூலையில் முடங்கி, அழுது அழுது முகம் வீங்கி , வெளியே தலை காட்ட முடியாமல் வெட்கப்பட்டு, தானே தற்கொலை செய்துக்கொள்ளலாமா என்ற முடிவு வரை சென்று, அதையும் செய்ய முடியாமல், தன்னைச் சுற்றி ஆசிரியர்களும் உறவினர்களும் இரவு முழுவதும் உடனிருந்ததால் இந்த நேரம் வரை உயிருடன் தப்பி பிழைத்துள்ளார்.

நல்ல வேலை.  “டீச்சர் திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி”  என்று செய்தி பரவியதாலும் , மாணவர்கள் யாரும் பெற்றோர் போராட்டத்தில் கலந்துக் கொள்ளாததாலும் வழக்கு மட்டும் பதிவு செய்து பானு டீச்சரை ஜாமீனில் இரவே காவல் நிலையத்திலிருந்து வீட்டிற்கு கொண்டு வர முடிந்தது.

இவ்வளவிற்கும் சென்ற வாரம் தான் பானு டீச்சருக்கு, மாநிலத்தின் சிறந்த ஆசிரியர் விருதுக்கு பானு டீச்சரின் பெயரை பள்ளி நிர்வாகம் மாவட்ட கல்வி அலுவலர் மூலம் சிபாரிசு செய்திருந்தது. வழக்கமாக இது போன்ற விருதுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் பெயரைத்தான் சிபாரிசு செய்வார்கள். ஆனால் தலைமை ஆசிரியரே மாவட்ட கல்வி.5 அலுவலரை நேரில் சந்தித்து விளக்கமளித்ததால் பானு டீச்சரின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டது.

பானு டீச்சரின் வகுப்பில் படிக்காத மாணவர்களே இருக்க மாட்டார்கள். யாராவது படிக்கவில்லை என்றால் , அந்த மாணவரின் வீட்டிற்கு நேரில்சென்று, மாணவரின் பெற்றோரைப் பார்த்து அவர்கள் நிலைமை தெரிந்து அடுத்த முடிவு எடுக்கும்  பானு டீச்சர், பல மாணவர்களுக்கு இலவச வகுப்பு தன் வீட்டிலே எடுக்கும் பழக்கமும் உண்டு.

எப்பொழுதும் பாடம் நடத்தாமல் சமயத்தில் பொது விஷயங்களைப் பற்றி பேசுவதும் பானு டீச்சருக்கு பிடிக்கும். அப்படி ஒருநாள் நடந்த கலந்துரையாடல் தான் இது. பானு டீச்சர் கேள்வி கேட்க , பசங்கள் பதில் சொன்னார்கள்.

“நீங்கள் தவறு செய்தால் அப்பா, அம்மா என்ன செய்வார்கள்?”

“அடிப்பாங்க, சில நேரம் திட்டுவாங்க டீச்சர்.”” ஒருவன் திருடி போலீசில் மாட்டிக்கிட்டான் . போலீஸ் என்ன செய்யும்?”

“உண்மையை வரவழைக்க அடிப்பாங்க டீச்சர் ”

“நீங்க சொன்னிக்களே, அடிப்பாங்க , திட்டுவாங்கன்னு அதற்கு அர்த்தம் என்ன?”

“தப்பு செய்யறவங்கள திருத்த டீச்சர்”

“அப்படின்னா , எங்கள நம்பி உங்க அப்பா , அம்மா உங்க எல்லாரையும் எங்ககிட்ட ஒப்படைச்சி இருக்கும்போது, உங்க நலன் கருதி, உங்களை நீங்கள் தவறு செய்யும்போது ஆசிரியர்கள் கண்டிச்சா அது தவறா?

“இல்ல டீச்சர்”

இந்த கலந்துரையாடல் தலைமை ஆசிரியர் காதுக்குப்போய், அவருக்கும் பிடித்துப்போகவே, இதையே, ஒரு நாள் காலை பள்ளி இறைவணக்க கூட்டத்தில்,  அனைத்து மாணவர்கள் , ஆசிரியர்கள் பார்க்க , பானு டீச்சர் மற்றும் சக வகுப்பு மாணவர்களை வைத்து செய்து காட்ட, எல்லோரும் பானு டீச்சரை வெகுவாக பராட்டினார்கள். பானு டீச்சரின் இந்த உக்தி மறுநாள் சில செய்திதாள்களிலும் வந்து, ஒட்டு மொத்த ஆசிரியர்களின் பாராட்டையும் பெற்றது.

பானு டீச்சரின் மேல் போட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டுமென,  மறுநாள் பள்ளி திறக்கும் நேரம். மாணவர்கள் ஒன்று திரண்டி வகுப்புகளைப் புறக்கணித்தனர். பள்ளி நிர்வாகம் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பலன் ஏதும் ஏற்படவில்லை. சில ஆசிரியர்களும் மறைமுகமாக அதற்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் அவர்கள் , புத்தி சாலித்தனமாக மாணவர்களை பள்ளி வளாகத்துக்குள் அமைதியாய் உட்கார வைத்து விட்டனர்.

மயக்கத்திலும் பானு டீச்சருக்கு ஒரு விஷயம் காதில் எட்டியது. மாணவ , மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பானு டீச்சருக்கு ஆதரவாக தெருவில் நிற்கிறார்கள் என்று.6. பானு டீச்சர் ஒரு பேப்பரை எடுத்து, அதில், ” என் மேல் உங்களுக்கு மரியாதை இருந்தால், அனைத்து மாணவ , மாணவிகளும் பள்ளி செல்ல வேண்டும். இப்படிக்கு பானு டீச்சர்.” என எழுதி அதனை மாணவர்களுக்கு படித்துகாட்ட அனுப்பினார்.

பானு டீச்சர்ன் செய்தியை மாணவ, மாணவிகளுக்கு அங்கிருந்த சில ஆசிரியர்கள் படித்துக் காட்டினர். அமைதியாய் அனைத்து மாணவ, மாணவிகளும் பள்ளி சென்றனர்.

சிறிது நேரத்தில் மருத்துவ மனையிலிருந்து கைபேசி மூலம் பானு டீச்சருக்கு ஒரு செய்தி.” அனுமதிக்கப்பட்ட மாணவி அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும், இனி உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் கூறியவர்கள்,மாணவியும் அவளது பெற்றோரும் பானு டீச்சரை உடனடியாக சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

அதுவரை பானு டீச்சர் உடை மாற்ற வில்லை. முகம் கழுவவில்லை. சொட்டு தண்ணீர் கூட குடிக்க வில்லை. ஒரே நாளில் பல வருட பட்டினியின் பிரதிபலிப்பை முகம் காட்டியது. தானாக உட்காரக் கூட , முடியாத பானு டீச்சரின் அருகில் இருந்தவர்கள் உட்காரவைத்தார்கள்.                                                                                                                    மாணவியின் உடல்நலம் உடனடியாக பயணிக்கும் நிலையில் இல்லாததால் , காவல் துறை பள்ளி நிர்வாகம் மூலம் பானு டீச்சரை மருத்துவ மனைக்கு வரச்சொன்னது. பள்ளி நிர்வாகமும் அதற்கு ஒப்புக்கொண்டு , தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது. இச் செய்தி சிறிது புத்துணர்ச்சியை தர, முகம் மட்டும் அலசிக்கொண்டு கட்டிய சேலையுடன் , உடனிருந்தவர்கள் அனைவருடனும் பானு டீச்சர் மருத்துவ மனை சேர்ந்து மாணவியின் படுக்கையை அடைத்தனர்.

அங்கு மிகுந்த பாதுகாப்பு. காவல் துறையின் உயர் அதிகாரிகள் , தாசில்தார் , மாவட்ட உதவி கண்காணிப்பாளர் , மருத்துவ மனையின் அதிகாரிகள் , மாவட்ட நீதிபதி என எல்லோரும் கூடி விட்டனர் மாணவியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய. எப்படியோ செய்தி பரவி மருத்துவ மணியின் வாசலில் செய்தியாளர்கள் கூட்டம் வேறு கூடிவிட்டது பானு டீச்சர், பானு டீச்சரின் கணவர் , பள்ளி தலைமை ஆசிரியர் தவிர மற்றவர்களை உள்ளே விடவில்லை.

இவர்கள் உள்ளே சென்றதுதான் ,யாரும் எதிர்பாராமல் மாணவியும் , அவளது பெற்றோரும் பானு டீச்சரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அழுதுக்கொண்டே எதையோ சொல்ல முற்பட , பானு டீச்சர் அவர்களை தூக்கி கைகளால் வாயை பொத்தி எதையும் கூற வேண்டாமென தலையசைக்க, உடன் வந்தவர்களுக்கு எதுவும் புரியவில்லை.

ஆனால் , அங்கிருந்த உயர் அதிகாரிகளின் கட்டாயத்தால் , நடைந்ததை மாணவியின் அம்மா விவரித்தார். தன் மகள், தங்கள் உறவுக்கார பயனுடன் தகாத உறவு வைத்துக்கொண்டு பள்ளிக்கு வராமல் ஊர்சுற்ற, அதை அறிந்த பானு டீச்சர், மாணவியை அழைத்து அவள் கையை பிடித்துக்கொண்டு ” நீ என்பொண்ணு மாதிரி , உனக்கு இந்த வயசில எது சரி எது தப்பு எனத் தெரியாது. உன்அம்மா அப்பா பாவம் , கூலி வேலை செய்து உன்னை படிக்க வக்கிறாங்க. நீ அவங்களை காப்பாதவேண்டாம் ஆனா உன்னை அழிசிக்காதே.

முதலில் படிச்சி முன்னுக்குவா. ஒரு ஐஞ்சு வருஷம் ஆகட்டும். அப்ப இந்தக் காதல் சரின்னா தாளாரமா காதல் செய். நானே உனக்கு உதவி செய்யறேன். இதை உன்   காலா நினைச்சி கேட்கிறேன். இந்த பானு டீச்சர் சொன்ன கேப்பியாமா” என்று கேட்க , என் மகளும்  டீச்சரின் காலில் விழுந்து , யாரிடமும் சொல்ல வேண்டாமென தேம்பி தேம்பி அழுது , வீட்டிற்கு வந்து விட்டாள்.

அங்கிருந்து வீட்டிற்கு சென்றவள் , பானு டீச்சருக்கு முன்பு தன் மானம் போய்விட்டதே , இனி நாளை எப்படி அவர் முகத்தில் முழிப்பது என்ற பயத்தின் காரணமாகவே தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளாள்.

“பானு டீச்சர் என்பெண்ணுக்கு அம்மா மாதிரி இல்லை. அவங்க என் பெண்ணை காப்பாற்றிய தெய்வம். ஒவ்வொரு பள்ளியிலும் இப்படி ஒரு தெய்வம் இருந்தா பசங்க தப்பே செய்யமாட்டாங்க” பேசிய படியே , நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு பானு டீச்சர்ன் காலில் விழுந்தார்கள்.

பானு டீச்சரும் தனக்கு ஆபத்து வந்த போதும் , தன் மாணவியின் மானம் காத்த ஒரு உன்னத அம்மாவாக உயர்ந்து நின்றார்.

முற்றும்        

-கோவி.சேகர் 

                                 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad