எரிந்த பனைகள்
‘அண்ணே உங்களுக்கு ஃபோன்! நம்ம வேலா அண்ணன்…’
‘என்னது? வேலா அண்ணனா? அவன் செத்து எவ்வளவு காலம்… ஏன்டா? உனக்கேதும் கிறுக்குப் பிடிச்சிருக்…?’ என்று நான் கேள்வியை முடிக்கவில்லை. அதற்குள் என்னை முந்திக்கொண்டு ‘இல்ல… வேலாண்ணன்ட மனுஷி பேசுறான்டுதான்.. சொல்ல வந்த நான்’ என்று உடனடியாக பதில் கூறிவிட்டான் அந்த மடையன். எனக்கு அவன் மீது பற்றிக்கொண்டு வந்தது.
‘இந்தாங்க பிடிங்கண்ணே!’ என்று செல்ஃபோனை என்னிடம் தந்துவிட்டு நான் மறைந்திருக்கும் பாதுகாப்பான நிலவறைப் பதுங்குகுழியை விட்டு சட்டென மேலேறிச் சென்றான் மீசைகூட இன்னும் சரியாக அரும்பியிராத அந்த இளைஞன். முன்பெல்லாம் எத்தனையோ பல வெற்றிகளைத் தேடித்தந்த ஆனானப்பட்ட தளபதிகள் கூட என் வார்த்தைக்கு மறுவார்த்தை பேச பலதடவை யோசிப்பார்கள். இப்போது பதுங்குகுழிக்கு காவல் நின்றிருக்கும் கற்றுக்குட்டிப் பயல்களெல்லாம் என்னைத் திருத்திப்பேசுமளவுக்கு நிலைமை மாறிப்போய் விட்டதை நினைத்துப் பார்த்தேன். ‘காட்டு யானை புதைந்து விட்டால் சேற்றுத் தவளையும் ஒரு உதைவிட்டுப் பார்க்குமாம்’ என்று சும்மாவா சொன்னார்கள். அவன் தந்துவிட்டுப்போன செய்மதி தொலைபேசியைப் பார்த்தேன். வந்த அழைப்பு தவறிய அழைப்பாகத் துண்டிக்கப்பட்டிருந்தது. மீண்டும் அதே அழைப்பு வருவதற்காக எரிச்சலோடு காத்திருந்த வேளையில் மேலே காவலுக்கு நின்றிருக்கும் அந்த இளைஞன் என்ன செய்கிறான் என்று சற்று அண்ணாந்து பார்த்தேன்.
நின்ற இடத்திலிருந்து லேசாகச் சரிந்து கீழிருக்கும் என்னை அவன் எட்டிப்பார்ப்பது தெரிந்தது. நான் பார்ப்பதைக் கண்டதும் சட்டென்று நிமிர்ந்து விறைப்பாக நின்றான். ஆனாலும் அவனது கடைவாய் ஓரத்தில் மெல்லிய ஏளனம் உறைந்திருந்தது. அதைப் பார்த்ததும் உள்ளுரப் பற்றிக்கொண்டு வந்தாலும் இப்போது நான் இருக்கும் நிலைமையில் ஒரு சிறுவனைக்கூட அதட்ட முடியவில்லை; அதட்டவும் கூடாது. இவர்களில் ஒருவனை லேசாய் முறைத்தாலும் போதும். ‘இந்தா பிடி உன் துப்பாக்கி’ என்று முகத்தில்வீசி விட்டு அகதிகளோடு அகதியாய் எதிரிகளின் பக்கம் ஓடிப்போய்விடுவான். சில மாதங்கள் முன்புவரை என் பெயரைக் கேட்டாலே நடுநடுங்கிப்போய் காற்சட்டையை நனைத்த இந்த நாய்களையெல்லாம் இப்போது நானும் அனுசரித்துப் போக வேண்டியுள்ளதை நினைத்தபோது மனம் வெதும்பியது.
இந்த இடத்திற்கு நான் உட்பட எனது உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் குடும்பத்தவர்களும் மக்களோடு மக்களாக உயிர்தப்பியோடி வந்து ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டது. இதை உலகம் முழுவதிலும் இருக்கும் எங்கள் புலம்பெயர் ஆட்கள் ‘தற்காலிகப் பின்னடைவு’ ‘தந்திரோபாயப் பின்வாங்கல்’ என்றெல்லாம் வார்த்தைச் சிலம்பமாடிக்;கொண்டிருக்கின்றார்கள். இருந்தாலும் தோல்வியெனும் காட்டுவெள்ளம் எங்களைத் துரத்தியடித்திருக்கின்றது என்பதுதான் உண்மை. எனது கட்டளைத் தளபதிகள் பலரும் கொல்லப்பட்டு எங்கள் வசமிருந்த கையிருப்புகள் அனைத்தும் சின்னாபின்னமாகிப்போன நிலையில் தப்பியோடி இங்கு வருவதைத்தவிர வேறுதெரிவுகள் எதுவும் இருக்கவில்லை. எதிரிகளின் இரக்கமற்ற தாக்குதலுக்குப் பயந்து பிள்ளைகுட்டிகளோடு ஆயிரக்கணக்கில் இடம்பெயர்ந்திருக்கும் அகதி மக்களுடன் வேறுவழியின்றி நாங்களும் ஓடிக்கொண்டிருந்தோம். இனியும் ஓடித் தப்பமுடியாது எனும் நிலையில்தான் கடைசியாக உப்பேரிக்கும் கடலுக்கும் இடையில் நீண்டு கிடக்கும் இந்த ஒடுங்கிய நிலப்பரப்பில் அகதிமுகாம் ஒன்றை அமைத்து அதற்குள்ளே மக்களோடு நாங்களும் மறைந்திருக்கின்றோம்.
நானும் எங்கள் உயர்மட்டக்குழுவினரின் குடும்பத்தினரும் தோளில் துப்பாக்கியேந்தி எங்களுக்குக் காவலாய் நிற்கும் நூற்றுக்கணக்கான அடிமட்ட உறுப்பினர்களுமாய் இங்கு நாங்கள் தங்கியிருப்பதை எதிரிகள் அறிந்து முற்றுகையிட்டு விட்டார்கள். ஆனாலும் எங்களைச் சுற்றிக்கிடக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்களைத்தாண்டி வந்து எங்களைக் கண்டுபிடித்துத் தாக்கியழிப்பது எப்படி என்பதுதான் அந்தக் கொலைகாரர்களுக்கு இப்போதுள்ள ஒரே சிக்கல். சர்வதேசத்தின் கண்களை முழுமையாக குருடாக்கிவிடும் சந்தர்ப்பம் மட்டும் கிடைத்தால் அத்தனை மக்களையும் ஒன்றுசேர்த்துக் கொன்று தின்றுவிட காத்திருக்கும் ஓநாய்கள்;. குழந்தை குட்டிகளோடு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கும் அகதிமக்கள் மட்டும் எங்களின் பிடியிலிருந்து வெளியேறி அவர்கள் பக்கம் சென்றுவிட்டால் போதும். அடுத்த நிமிடமே எங்களையெல்லாம் கோழிக்குஞ்சை அமுக்குவதுபோல சுலபமாய்ப் பிடித்துவிடுவார்கள். அதனால்தான் இழப்பதற்கு உயிரைத்தவிர எதுவுமில்லாத இந்த நடைப்பிணங்களையெல்லாம் முகாமைவிட்டு வெளியேறிவிடாமல் மிரட்டியும் எதிரிகள் பற்றி அதீத திகிலூட்டியும் வைத்திருக்கின்றோம். உண்மையை அப்பட்டமாகக் கூறுவதானால், எதிரிகளின் துப்பாக்கி ரவைகளிலிருந்து இப்போது எங்களைக் காப்பாற்றி வைத்திருப்பதெல்லாம் ஒட்டிய வயிறுகளும் பஞ்சடைத்த விழிகளுமாய் உலவும் இந்த உயிருள்ள மண்மூட்டைகள்தான்.
இந்த முகாமுக்குள் அவ்வப்போது வந்து விழுந்துகொண்டிருக்கும் எறிகணைகளினால் அகதிகள் பலர் இறந்தபோதிலும் பதுங்குகுழிகளுக்குள் மறைந்திருக்கும் எமக்கு அதிக பாதிப்புகளிருக்கவில்லை. சர்வதேச சக்திகளை அனுசரிக்கவேண்டிய தேவை எங்களைவிட எங்கள் எதிரிகளுக்குத்தான் இப்போது அதிகமுள்ளது. அதனால் இப்போதைக்குப் பாரிய அழித்தொழிப்பு நடவடிக்கைகள் எதனையும் நடாத்தமாட்டார்கள் என்று கணக்குப்போட்டு வைத்திருக்கின்றோம். அதை நம்பித்தான் இதுவரைக் காய்நகர்த்திக் கொண்டிருக்கின்றோம். அதற்கிடையில் சில சர்வதேசத் தொடர்புகளும் நகர்வுகளும் சாத்தியப்பட்டு விடுமானால் போதும். இருந்தாலும் யாரையும் எதையும் முழுமையாக நம்பவே முடியாது. எதிர்பாராத எதுவும் இனிமேல் நடக்கலாம். அதனால்தான் இந்த அகதிமுகாமுக்குள் மக்கள் ஓரளவு சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருந்த போதிலும் நாங்கள் மாத்திரம் ஆழமான பதுங்கு குழிகளுக்குள்ளேயே அடைந்து கிடக்கின்றோம்.
சிலவேளை எதிர்பாராத வான்தாக்குதல்கள் ஏதேனும் நடந்தால்கூட தப்பிப்பிழைக்கும் சாத்தியத்தை அதிகரிப்பதற்காக நாங்கள் ஒரேஇடத்தில் ஒன்றாக இருப்பதில்லை. ஆம், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கூட தனித்தனியாய்ப் பிரித்து வௌ;வேறு நிலவறைகளில் தங்கவைத்திருக்கின்றோம். அதிலும் குறிப்பாக என்னை மட்டும் யாரும் இலகுவில் கண்டுபிடிக்கவோ யூகிக்கவோ முடியாத இந்த இரகசியமான இடத்தில் தனியாக வைத்திருக்கின்றது என்னுடைய விசேட பாதுகாப்பு அணி. செய்மதித்தொலைபேசியை வைத்துக்கொள்வதற்கு கூட அந்தக்குழு என்னை அனுமதிக்கவில்லை. முக்கியமான அழைப்பு என்று ஏதாவது வரும்போது மட்டும் காவலுக்கு நின்றிருப்பவர்கள் மூலம் அதைக் கொண்டு வந்து தருகின்றார்கள். எல்லாவற்றையும் அவர்களது பொறுப்பிலேயே விட்டுவிட்டு வெறும் பார்வையாளனாய் இருக்கும் நிர்ப்பந்தம். இதுவரையில் கட்டளையிட்டு மட்டுமே பழகிய எனக்கு இதெல்லாம் முற்றிலும் புதிய விடயம். ஆனாலும் என்னைப் பாதுகாக்கும் திட்டத்திற்கு ஒத்துழைப்பதைத்தவிர வேறுவழியில்லாததால் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டிருக்கின்றேன்.
எங்கள்தலைவிதியை தீர்மானிக்கப்போகும் நாற்பத்தியெட்டு மணித்தியாலங்களை இந்த நாற்றம்பிடித்த பதுங்குகுழிகளுக்குள்தான் நான் கடந்;தாக வேண்டும். நாங்கள் உயிர்தப்புவதற்கு சர்வதேச நாடுகளின் தலையீடு அல்லது பேச்சுவார்த்தை என்று ஏதாவது ஒரு நிகழ்வுதான் தேவை. அப்படி ஒன்று எப்படியும் இன்றிரவுக்குள் நிகழும் எனும் நப்பாசையோடு நாங்கள் எல்லோருமே காத்திருக்கின்றோம்.
என் கையிலிருந்த தொலைபேசி திடீரென உயிர்பெற்று அதிர்ந்தது. அதில் ஒளிர்ந்த இலக்கத்தைப் பார்த்ததும் மிகுந்த ஆர்வத்துடன், ‘ஹலோ கொல்லுங்க.. சே! சொல்லுங்க அண்ணி! நான் தம்பிதான் பேசுறன்..’
‘…………….’
‘உதென்ன அண்ணி இப்பிடிச் சொல்றீங்கள்! அப்படிச் செய்யுறதெண்டா கிளி அவங்கள்ற கையில விழுறதுக்கு முன்னமே செய்திருக்கலாமே..?’
‘……’
‘சரி, ஆனால் அக்கரைகளில ஆர்ப்பாட்டம் கடையடைப்பு என்டு கத்தித் திரிஞ்சதால எந்தப் பிரயோசனமுமில்லையே… அங்கங்கே ரெண்டு மூண்டுபேரைப் பத்தவச்சுக் கொளுத்திவிட்டிருந்தாலும் பரவாயில்ல.. ஆனா இப்ப இஞ்ச இருக்கிற நிலமையில இனி அதெல்லாம் உதவாது போலிருக்கு… கோவையில.. மும்பாய்ல மாதிரி ஒரு நூறு இருநூறை போட்டால்தான் டெல்லித் தலைப்பாகைக்காரர் அசைஞ்சு குடுப்பார். ஆங்.. சரி.. நீங்க சொல்லுங்கோ கேட்கிறன்’
‘………….’
‘ச்சும்மா நீங்களும் அதையே சொல்லிக்கிட்டு இருக்காதீங்கண்ணி..! அதைக் கேட்கப் போய்த்தான் இவ்வளவும் வந்தது. அந்த நேரமே அண்ணனிட்ட எவ்வளவு சொன்னனான். அவர்தான் 9-11, அமெரிக்கா, சர்வதேச சமூகம், நாகரீகம்.. யுத்த நிறுத்தம், மோதல் தவிர்ப்பு, சமாதான ஒப்பந்தம் அது.. இதென்டு கதைச்சுச்சுத்தானே கவுத்தவர். 2001ல மீசைமழிச்சு சபாரிசூட் உடுத்தி ப்ரஸ் மீட்டிங் டீவி பேட்டி அது இதென்டு சும்மா உலகத்தை ஏமாத்தினதுல என்ன நடந்தது? ஒத்துமை குலைஞ்சுபோய் எல்லாமே இரண்டா உடைஞ்சதுதான்தான் மிச்சம். அதெல்லாம் செய்யாம அன்டைக்கிருந்து இவனுகளுக்கு தொடர்ந்து அடிச்சு வந்திருந்தா இன்டைக்கு இப்பிடி ஒரு நிலைமை வந்திருக்குமா? அதை விட்டுட்டுச் சும்மா போட்டு…’
‘………….’
‘பொட்டு இல்லண்ணி! ‘சும்மா போட்டு’ என்டு சொல்ல வந்தனான்… நீங்க பயப்பிட வேணாம்.. எல்லாரும் இஞ்ச பங்கர்லதான்!’
‘………’
‘ஆங்.. சாப்பாடு தானே..? அதெல்லாம் ஏதோ பரவாயில்ல.. எங்களுக்குக் கொஞ்சம் கிடைக்குது. என்ன… சனங்கள்தான் பாவம் சோத்துக்கும் பாலுக்கும் வழியில்லாம அலையுதுகள்! ஓமோம்.. அதனாலதான் அந்தப் பக்கமே யாரும் போகேலாமக் கிடக்கு. கண்டாலே சனம் காறித் துப்புதுகளாம்.. முந்தி இருந்த மாதிரியில்ல… விதானைமாருக்குள்ள மரியாதை கூட கிடையாது!’
‘…..’
‘ஓமோம்! அதுதான் லவுட்ஸ்பீக்கரைப் பனை உச்சியில கட்டி பாட்டுப்போட்டுச் சனங்களைக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறானுகள்… இதுகள் சனங்களும் நாங்கள் எவ்வளவுதான் மறிச்சாலும் சுட்டுப்போடுவம் என்டு பயப்பிடுத்தினாலும் ஒண்டொண்டா ஆளத் தெரியாம ஆள் அந்தப்பக்கம் நழுவுதுகள். சனத்தை விடுங்க.. சனத்தோட சேர்ந்து துவக்கை எறிஞ்சிபோட்டு எங்கடை இவனுகளுமல்லவா சத்தமில்லாம ஓடுறானுகள்.. சே! அதைப்பார்க்கேக்கதான் எனக்குப் பத்திட்டு வருகுதண்ணி.. சனம் முழுதும் அந்தப்பக்கம் போயிட்டா பிறகு எங்கள்ற கதை முடிஞ்சுது.. அதுக்கிடையில ஏதாவது பண்ணித் தொலைங்க!’
‘………….’
‘ஓமோம், இந்தச் சண்டையை நடத்துறதே டெல்லியில இருக்கிற அந்த தலைப்பாகைக்காரரோட ஆட்கள்தானே.. அதால நீங்க திரும்பவும் ஒருக்கா அவங்களோட கதைக்கிறீங்களே அண்ணி..? பேச்சுவார்த்தை இல்லாட்டியும் பரவாயில்ல.. ஆகக்குறைஞ்சது சீஸ்பயர் ஒன்டாவது கேளுங்க.. அவன் நம்ம ஜேபீ கப்பல் ஒன்டு ரெடியா இருக்குதாம் அது இதென்டு ஸ்டண்ட் அடிச்சிக் கொண்டிருக்கிறான். அதையெல்லாம் பெரிசா நம்பேலாது.. ஆனா இஞ்ச உள்ள நிலைமைகள் எதுவும் வெளியில கசியாமல் பாத்துக்கொள்ள வேணும்.. சரி, அப்ப நீங்க கதைச்சுப் போட்டுச் சொல்லுங்கோ! ஆனா ஒண்டு, கெதியாக் கதைக்க வேணும்.. இல்லையெண்டால் அடுத்த முறை உங்களுக்கு இப்படியெல்லாம் எங்களோடை பேசக்கிடைக்காது. விளங்குதே?’ என்று சிறிது கோபத்தோடு அழைப்பைத் துண்டித்தேன்.
அண்ணியின் குரலில் அத்தனை சுரத்து இல்லை. நிலைமை எங்கள் எல்லோருடைய கையையும் மீறிக்கொண்டிருக்கின்றது என்பது அவவின் கொச்சைத்தமிழ் பேச்சிலேயே புரிந்துவிட்டது எனக்கு. இவர்கள் என்னதான் முயன்றாலும் இனிமேல் அதையெல்லாம் நம்புவதிலே பலனில்லை என்று என்னுடைய உள்மனம் எச்சரித்தது.
என்னை நம்பி இத்தனை காலமும் போராடிய அத்தனை இளைஞர்களும் கொல்லப்பட்டு எங்கள் சகலமும் அழிந்து போய் பின்னடைந்து விட்ட நிலையில் இனிமேல் எதிரிகள் எங்களோடு சமரசத்திற்கு வரப்போவதில்லை என்பதை இப்போது தெளிவாக உணர்ந்துவிட்டேன். புலம்பெயர்ந்த மக்கள் உரத்துக்குரல்கொடுத்தும் சர்வதேசம் கண்டுகொள்ளாமல் இருந்து வருவதிலிருந்தே இதை நாங்கள் எதிர்பார்த்திருக்க வேண்டும். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி எங்களைச் சுற்றி சனங்களை சேர்த்து வைத்துக்கொண்டு காலத்தைப் போக்குவது என்றும் தெரியவில்லை. பசியும் பட்டினியும் வாட்டியதில சனத்துக்கு எங்கள் மீதிருந்த மரியாதையெல்லாம் ஏற்கனவே போய்விட்டது. இனி பயமும் இல்லாமல் போனால் எங்கள் நிலைமை அதோகதிதான். ஒவ்வொரு நாளும் மக்களின் எதிர்ப்பு துப்பாக்கிகளையும் மீறி வலுத்துக் கொண்டிருக்கின்றது. இப்படியே போனால் ஒரு கட்டத்தில் சனங்களே ஒன்றுதிரண்டு எங்களைக் கொன்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
‘சே! இந்தச் சனங்களுக்காகத்தானே போராட இறங்கின நாங்கள்.. தம்பிமார் தம்பிமார் என்டு அன்டைக்கு மெத்தப்படிச்ச வேட்டிகளும் இன்டைக்கு வெள்ளைக்கார கோட் சூட்டுகளும் என்னைப் பயன்படுத்திப்போட்டு ஏமாத்திட்டினம். சண்டையாலேயே சாதிக்கத் தெரிஞ்ச என்னை சர்வதேச நிலைமை, சர்வதேச நிலைமை என்று சொல்லிச் சொல்லிச் சமாதானம் பேச வச்சு என்னையும் என்னுடைய நோக்கத்தையும் வீணடிச்சுப் போட்டாங்கள். இப்ப நாங்கள் உப்புக்கடலுக்கும் எதிரிகளுக்கும் இடையில மாட்டுப்பட்டுப்போய்க் கிடக்கிறோம் வேலா அண்ணன் அடிக்கடி சொல்லும் அந்த சர்வதேச சக்திகளெல்லாம் இப்ப எங்களைக் கண்டும் காணாததுபோல இருக்கிறான்கள். எங்கட அடிபாடுகளை வச்சுத்தானே அவனுகளுக்கு ஆயுத வியாபாரம் அமோகமாக நடந்தது.. இனி நாங்கள் தேவையில்லை என்றதும் கைவிட்டுட்டான்கள்.. ஆனால் ஒருவகையில அவனுகளையும் முழுசாகப் பிழை சொல்லேலாது. ஒவ்வொரு முறையும் துரோகிகள் துரோகிகள் என்று நாங்கள் போராடிய பொடியளையும் அப்பாவிச் சனத்தையும் போட்டுச் சாகடிச்ச காலத்தில இருந்து ‘ஜனநாயக மீறல்கள் செய்யாதீங்கோ செய்யாதீங்கோ.. பிறகு வெளியுலகத்தில பேர் பழுதாகிடும்’ என்று வெள்ளைக்காரன்கள் உள்பட எத்தனைபேர் எச்சரிச்சவங்கள்..? நாங்கதான் காதிலை வாங்காமல் கூடச்சேர்ந்து போராடினவை எல்லாத்தையும் சுட்டுச் சரித்தனாங்கள்.. காணாததற்கு அவசரப்புத்தியில அக்கரையில பிரைம் மினிஸ்டராக வந்திருக்க வேண்டிய அந்த மனிசனையும் கடல்கடந்துபோய் எலெக்சன் மீட்டிங்குல சிதறடிச்சு.. செய்த குற்றம் மாட்டுப்பட்டு இன்டைக்கும் அந்தப்பக்கம் முழுசாத் தலை காட்ட முடியாமலிருக்கு. அன்டைக்கு அப்படிச் செய்த காரணத்தாலதான் இன்டைக்கும் எங்களைக் காப்பாத்தச் சொல்லி தலைப்பாகைக்காரரிட்ட நேரடியாக கேட்க முடியாமலிருக்கு..
ஒருவேளை மற்றவை சொல்றதுதான் சரியோ.. நாமதான் பிழை விட்டுட்டமோ…? ‘விடுதலை விடுதலை’ என்று சொல்லி ஆள் சேர்த்ததும் பிறகு பணமும் பலமும் கூடியதும் ‘துரோகிகள் துரோகிகள்’ என்று கூட நின்று போராடின நண்பர்;களையெல்லாம் போட்டுத்தள்ளியதும்தான் இன்டைக்கு இப்பிடி ஒருபக்கம் வங்கக்கடலும் மறுபக்கம் எதிரிகளும் காத்திருக்க கதவிடுக்கில மாட்டின எலிமாதிரி கிடக்க காரணமோ..’ என்று மெலிதான ஒரு சுடலை ஞானம் வந்தது. ஆனால் அடுத்த நிமிடமே ‘சேச்சே! அது எப்படிச் சரிவரும். இவனுகள் சும்மா.. வெளிநாடுகள்ற கதைகளைக் கேட்டுப்போட்டு கடைசியில எல்லாத்தையும் நாசமாக்கிப் போடுவான்கள் என்டதால்தானே என்று எல்லாரையும் அழிச்சுத் துரத்திப்போட்டு நான் மட்டுமே போராடுவேன் எல்லாத்தையும் கையிலெடுத்தனான்’ என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.
‘அவன் ஜேபீயும் மற்றவங்களும் வெளிநாடுகளில நிண்டு கொண்டு சொல்லுற கதையிலலெல்லாம் உண்மையில்ல போலத்தானிருக்கு. வெளிநாட்டுக் குளிரில வருசக்கணக்கில கோட்டும் சூட்டும் பியரும் இறைச்சியும் ஹோட்டலும் பெட்டைகளும் என்டு நல்ல சொகுசா வாழ்ந்து கிடந்து பழகிட்டானுகள். அதனாலதான் கதையில இருக்கிற வேகம் செயலுல இல்லாமலிருக்கு. அப்படியே அந்தக் கப்பல் வந்தாலும் கடல்வழியே நாங்கள் அப்புறப்படுவதற்கு டெல்லி தலைப்பாகைக்காரருடைய கடற்படை திமிங்கிலங்கள் விட்டுவைக்குமா என்ன? எத்தனை பாடுபட்டு எவ்வளவு பேரைப் பறிகொடுத்தும் பலிகொடுத்தும் நடாத்திய போராட்டம். கடைசியில் யாராருடையதோ காலைப்பிடிச்சு உயிர்ப்பிச்சை கேட்கவேண்டிய அளவுக்கு போய்விட்டதே..’ என்று வெகுநேரம் யோசித்தபடியே இருந்ததில் மனம் களைத்துப்போனது. தூக்கம் கண்களைச்சுழற்றியதில் பங்கருக்குள்ளேயே தூங்கிப்போனேன்.
*********
‘டும்…டும்! படீர்!’
எங்கேயோ தூரத்தில் பெருத்த வெடியோசைகள் கேட்டுத்திடுக்கிட்டு கண்விழித்தேன். வெடியோசையின் அதிர்விலே நானிருந்த பதுங்கு குழி அதிர்ந்து மண்கொட்டியது. மேலே முகாமுக்குள் என்ன நடக்கின்றது என்பது தெரியவில்லை. கைத்துப்பாக்கியை உருவிக்கொண்டு நிலவறைக்குள்ளிருந்து சிறிது மேலே ஏறிவந்து நிலமட்டத்தோடு கண்களை வைத்து எட்டிப்பார்த்தேன். மேலே என்னுடைய காவலுக்கு நின்றிருந்தவர்கள் யாரையுமே காணவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்த அகதி முகாம் வெறிச்சோடிக்கிடந்தது. வெகுதூரத்தில் திரள் திரளாய் கரும்புகை கிளம்பிக்கொண்டிருக்க வெடியோசைகள் அடுத்தடுத்துக் கேட்டன. அந்த வெடியோசைகளைத் தொடர்ந்து வெடிமருந்தின் கந்தகமணமும் பனைவடலிகளின் கருகல் பச்சை மணமும் காற்றில் கலந்து நாசியைத் துளைத்துச் சென்றது.
உடனே எனக்குப் புரிந்து விட்டது. இது ஒன்றும் எதிரிகளின் தாக்குதல் வெடியோசை கிடையாது. நாங்கள் பின்வாங்கி வந்தபோது தற்காப்புக்கென கொண்டு வந்தவற்றையெல்லாம் ஒரு பெரும்கிடங்கில் மறைத்து வைத்திருந்தோம். எப்போதாவது இனிமேல் தப்பிக்க வழியேயில்லை என்ற நிலைமை வந்தால் மட்டும் எதிரிகளின் கைகளுக்கு அவை கிடைத்துவிடாமலிருக்க அத்தனையையும் ஒன்றாகச் சேர்த்து அழித்துவிடும்படி என்னுடைய பாதுகாப்புக் குழுவுக்கு முன்னர் நான் கூறியிருந்தேன். அதன்படி அவர்கள்தான் கிடங்கை வெடிவைத்து கொளுத்தியிருக்கின்றார்கள் போலும்.
அதுசரி, அகதி முகாமிலிருந்த மக்கள் எல்லோரும் எங்கே..? எல்லோரும் எப்படி இங்கிருந்து வெளியேறிப் போனார்கள்..? அப்படியானால் என்னுடைய துப்பாக்கிப் பையன்கள் என்ன ஆனார்கள்? சரிதான், அவர்களும் மக்களோடு மக்களாக எதிரிகளின் இடத்திற்கு ஓடிப்போய்விட்டார்கள் போலும். அப்படியானால் அகதிகள் முழுமையாக தங்கள் பகுதிக்கு வந்து சேரும்வரை காத்திருக்காமல் இனி எதிரிகள்; உள்ளே புகுந்து வரத்தொடங்கிவிடுவாhர்கள். அவ்வாறானால் நிலவறைகளுக்குள்ளே பதுங்கி இருக்கும் எங்கள் வாழ்வின் இறுதி நிமிடம் அண்மித்து வந்து விட்டது என்றுதான் அர்த்தம். இனிமேல் கழியும் ஒவ்வொரு நிமிடத்துளியும் எங்களை அழிவு எனும் அதலபாதாளத்தை நோக்கி தள்ளிக் கொண்டிருக்கின்றது.
இன்னும் சிறிது நேரத்தில் எம்மை வேட்டையாடுவதற்காக முன்னேறிவரப்போகும் எதிரிகள் என்னைத்தான் மிகத்தீவிரமாகத் தேடுவார்கள். உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் இங்கேதான் எங்கேயோ சில நிலவறைகளுக்குள் மறைந்திருப்பார்கள். அவர்கள் அனைவரும் என்னுடைய விசுவாசிகள். தங்கள் உயிரை விடவும் என்னையும் என்னுடைய இலட்சியத்தையும் நேசிப்பவர்கள். எதிரிகளின் கைகளிலே உயிருடன் நிச்சயம் சிக்க மாட்டார்கள். எதிரிகள் வரும் முன்பே தற்கொலை செய்து கொள்ளுவார்கள். அல்லது இந்தநேரம் அனைவரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டு பிணங்களாகியும் இருக்கலாம். ஆம், தப்பிக்க முடியாமல் மாட்டிக்கொள்ளும் நிலைமை வரும்போது உயிர்ப்பிச்சை கேட்டு எதிரிகளிடம் மண்டியிடுவதைவிட தற்கொலை செய்து கொள்வதுதான் உத்தமம். அப்படித்தானே இதுவரை எங்கள் அடிமட்ட போராளிகள் முதல் மேல்மட்ட உறுப்பினர்கள் வரைக்கும் நாங்கள் காலம் காலமாகப் போதித்து வந்திருக்கின்றோம். ஆனால் ஒன்று, என் மனைவியும் பிள்ளைகளும்தான் பாவம். அவர்களுக்குத் தற்கொலை தெரியாது. அவர்களுக்கு இப்படியொரு நிலைமை வரும் என்று அறிந்திருந்தால் எல்லோரையும் வெள்ளைக்கார அண்ணியிடமாவது முன்கூட்டியே அனுப்பிவைத்திருக்கலாம். அவர்களுக்கு இனிமேல் என்ன நடக்குமோ என்று நினைத்தால்தான் நெஞ்சுவலிக்கிறது எனக்கு.
இத்தனை வருடத்தில் எத்தனை ஆயிரம் ஏழைச் சிறுவர்களையும் சிறுமிகளையும் கழுத்தில் நச்சுக்குப்பியுடன் களமிறக்கி எதிரிகளின் துப்பாக்கி ரவைகளுக்குப் பலிகொடுத்திருப்பேன். எத்தனை நூறு இளைஞர்களையும் யுவதிகளையும் ஓர் இரவுநேர உணவுக்கும் ஒரு குழுப்புகைப்படத்திற்கும் பின்பு தம்மைத்தாமே அழித்துக்கொள்ள அனுப்பிவைத்திருப்பேன். அப்போதெல்லாம் அதிகாரத்தை எவ்வழியிலேனும் கைப்பற்றிவிட வேண்டும் எனும் பேராசைக்கு முன்பு மனித உயிர்களின் உண்மையான மதிப்பு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை எனக்கு. இந்த உலகில் தொடர்ந்து வாழ வேண்டுமென்பதிலே ஒவ்வொரு உயிருக்கும் இருக்கும் ஆசையெல்லாம் என்னுடைய மனiவி பிள்ளைகளின் உயிருக்கு ஆபத்து வந்திருக்கும் இந்த வேளையில்தானே எனக்குத் தெரிகின்றது.
இந்தச் சிறிய நாட்டைச் சுடுகாடாக்கியது என் எதிரிகள் மட்டும்தானா? ஷெல்லடிகளாலும் விமானத் தாக்குதல்களாலும் ஆயிரக்கணக்கில் எமது மண்ணில் அவர்கள் கொன்றொழித்தவை மட்டுமா உயிர்கள்..? அந்தக் கொடூரர்களுக்கு இணையாக நானும்தானே உயிர்களை அழித்தேன். நகரங்களிலும் கிராமங்களிலும் வயல்களிலும் சேனைக்காடுகளிலும் கடலிலும் எனது கட்டளையால் உயிரிழந்த ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் துர்மரணங்களை எண்ணிப் பார்க்கின்றேன். மரணத்தறுவாயில் இருக்கும் என்னைப்போலவே தம் உறவுகளை எண்ணி பித்தம் கலங்கிய எத்தனை கணவர்கள், மனைவிகள், தாய்-தந்தையர்கள், குழந்தைகள் இருந்திருப்பார்கள்..? நான் ஆணையிட்டு அனுமதித்த ஒவ்வொரு வெடியும் இந்த மண்ணில் எத்தனை உயிர்களை காவு கொண்டது என்பதை இப்போதுதான் நினைக்கத் தோன்றுகின்றது. ஆரம்ப காலத்தில் விடுதலையின் பெயரால் எதிரிகளை மட்டுமே தீர்த்துக் கட்டியவன் பின்பு சகபோராளிகளையுமல்லவா ‘போட்டுத்தள்ள’ தொடங்கினேன். கடைசியில் பார்த்தால் எதிரிகளால்கூட தேடி அழித்திருக்க முடியாத எண்ணிக்கையில் இந்த மண்ணில் நாங்கள் தேடித்தீர்த்துக்கட்டிய போராளிகள்தானே அதிகம்..?
அவர்களை மட்டுமா அழித்தேன்? ஒன்றுக்குள் ஒன்றாய் வாழ்ந்திருந்த சகோதரர்களையுமல்லவா துரத்தியடித்தேன். தரையிலே சிரம் பதித்து இரவிலே தொழுதவர்கள் நிமிர்வதற்கிடையில் குருதிச்சேறடித்த எங்கள் உலகமகா கொடூரங்களையெல்லாம் இந்த உலகம்தான் மன்னிக்குமா? உறக்கத்திலே உயிரைவிட்ட குழந்தைகள் எத்தனை.. வாழவேண்டிய இளம் பிஞ்சுகள்தான் எத்தனை.. வயோதிபர்கள், நோயாளிகள், பெண்கள், கர்ப்பிணிகள், தாய்மார்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளிகள், அறிஞர்கள்தான் எத்தனை..? அவலச்சாவிலே அழிந்துபோன உயிர்களின் ஆத்ம வேதனைகள்தான் ஒன்றுதிரண்டு ஒரு பெருஞ்சாபமாய் மாறியதா…?
வெகுநேரம்வரை கண்களைமூடி அமைதியாய் அமர்ந்திருந்தேன்.
வட்டுக்கோட்டை உசுப்பேற்றல் முதல் மாவிலாறு மடமை வரை நடந்தவை எல்லாமே என் மனதில் திரைப்படக் காட்சிகள் போல வரிசையாய் ஓடி மறைந்தன. எவ்வளவு நேரம் அப்படி இருந்தேனோ தெரியவில்லை. முதல் நாள் இரவு உட்கொள்ள வேண்டிய இன்சுலீன் வில்லையை மறந்துவிட்டதால் லேசான மயக்கமும் இருந்தது. ஆனால், இனிமேல் அதெல்லாம் எனக்குத் தேவைப்படும் என்று தோன்றவில்லை. ஆம், எல்லாமே கை மீறிப்போய்விட்டதால் என்னை நானே அழித்துக்கொள்வது என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தேன். வெகுநாட்களின் பின்பு எனது கண்களில் கண்ணீர் கசிந்தது.
ஒரு வீரனாக எதிரிகளுடன் நேருக்குநேர் போராடிச்சாகாமல் இப்படி ஒரு பதுங்கு குழிக்குள் கிடந்து சாகப்போவதை நினைத்தால்தான் அதிக வேதனையாக இருந்தது எனக்கு. ஆயினும் அதைவிட வேறு தெரிவுகள் என்னிடமிருக்கவில்லை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக என் கழுத்தில் பயனின்றித்; தொங்கிக்கிடந்த நஞ்சுக்குப்பியை ஒரு தடவை தடவிப் பார்த்துக்கொண்டேன். ஆரம்பகாலம் முதல் எனக்காக தமது இன்னுயிரைத் தியாகம் செய்துவந்த அத்தனை போராளிகளையும் எண்ணிப் பார்த்தேன். அடுத்து, இன்று தோல்வியிலும் என்னோடு தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளப்போகும் என் விசுவாசமிக்க உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அத்தனை பேரினதும் வீரத்தியாக உள்ளங்களை நினைத்துக்கொண்டேன். அவர்களின் வீரத்திற்கும் தியாக உணர்வுக்கும் இந்த நிலையிலே நான் அளிக்கும் மிகப்பெரும் கௌரவம் எனது தற்கொலை மரணம் ஒன்றுதான் என்று எண்ணியபோது தோல்வியிலும் பெருமிதத்தால் என் நெஞ்சு விம்மியது.
கழுத்திலிருக்கும் நஞ்சுக்குப்பியை கழற்றிக்கையிலெடுத்தேன். அதை வாயில் வைத்துக்கடிப்பதற்கு முன்பு எனது தாய் மண்ணை கடைசியாக ஒருதடவை பார்த்துவிட விரும்பினேன். மெல்ல எழுந்து பதுங்குகுழி நிலவறையை விட்டு மேலேறிச்சென்றேன். நிலமட்டத்தோடு கண்களை வைத்து வெளியே நான் பார்த்தபோது,
சற்றுத்தூரத்தில் விசுவாசமிக்க என்னுடைய உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அத்தனைபேரும் ஆளுக்கொரு வெள்ளைக்கொடியை தமது கைகளில் உயர்த்திப்பிடித்து அசைத்தபடி எங்கோ வரிசையாய்ச் சென்றுகொண்டிருந்தார்கள்.
முகம்மது ரஃபி