தாதுண் பறவை
அச்செய்தி அவளது காதினில் விழுகையில், நெஞ்சுரைக்கூட்டுக்குள் இடி இறங்குவதைப் போலிருந்தது. அவள் ஓடிச்சென்று அவளது அப்பனை எழுப்பினாள். அவரோ நிறைமது மயக்கத்தில், எழுப்பியக் கையைத் தட்டிவிட்டபடி, போர்வையை இன்னும் தலை வரைக்குமாக இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குபவராக இருந்தார்.
பூங்குழலிக்குத் தெருவை எழுப்புவதைத் தவிர வேறு வழி தெரிந்திருக்கவில்லை. நடுநிசி நேரம். மச்ச இருட்டு. கூகை, சாத்தான் சொல்லும் செய்திக்கு ‘இம்’ போடுவதைப் போல முணங்கிக்கொண்டிருந்தது. அதைக் கேட்கயில், நிணநீர் உறைவதைப் போலிருந்தது. இந்தக் கூகையைப் பிடித்து யாரேனும் கூண்டில் அடையுங்களேன். அதை நெருப்பில் காட்டி, கழுத்தைப் பிடித்துக் கொல்லுங்களேன் என மனதிற்குள் சபித்தவளாய், தெருவிற்குள்ளாக ஓடினாள். யார் வீட்டுக் கதவைத் தட்டுவது…? என்ன சொல்லி அவர்களை எழுப்புவது? என் தவிப்பும், இதயத் துடிப்பும் அவர்களுக்குப் புரியுமா? எந்த வீட்டிலும் விளக்கு எரியவில்லை, யார் வீட்டிலும் முணங்கல் சத்தமோ, கிசுகிசுப்போ கேட்கவில்லை. அத்தெருவை பற்களால் சபித்துக் கடித்தவளுக்கு முச்சந்தியில் நின்றுகொண்டு, ஒரு பேயைப் போல, பூதம்போல ‘ஆ…ஓ….அய்யோ…’ என ஒரு பெருங்குரலெடுத்து அழவேண்டும் போலிருந்தது.
அவள் அரவிந்தன் வீட்டை நோக்கி ஓட கால்களை எடுத்தாள். துரத்திப்பிடிக்கும் தூரத்திலா அவன் வீடு இருக்கிறது? அவளது காலே மறுகாலைப் பின்னியது. விடியும் வரைக்குமாக காத்திருக்கலாமென நினைத்தாள். அவள் நினைத்தென்ன, கால் நினைக்க வேண்டுமே. அவளது கால்கள் மனம் போகும் போக்கில் பாய்ந்தன.
தார்ச்சாலை வழியே, காடு, கழனியைச் சுற்றி எப்பொழுது அவன் வீட்டைச் சென்றடைவது? குறுக்குவழிவொன்று நினைவுக்கு வந்தது. வேலிக்கருவைகள், சப்பாத்தி, எருக்கு முளைத்தக் கடுங்காடு. அதைக்கடந்தால் குறுக்கே ஓடும் காட்டாற்று மணல்வெளி. அதைத்தாண்டி ஓடுவதைத் தவிர அவளுக்கு வேறு வழித் தெரியவில்லை.
அவள் அத்தனை வேகமாக கால்கள் எடுத்து வைத்து நடந்தாள். அவள் நடந்த வேகத்திற்கு அவளுக்கும் எதிர்திசையில், வீசிக்கொண்டிருந்தக் காற்று அவளது ஆடையை பின்பக்கம் நின்று, இழுக்கவும், கூந்தலுக்குள் விரல்களை நுழைத்து பின்னலைக் கலைக்கவுமாக இருந்தது. இருவரும் காதல் புரிந்தக் காலத்தில், அவன் செய்த வினைகளைப் வேடிக்கைப் பார்த்த காற்றின் வேலைதான் இதுவெனப் புரிந்துகொண்ட அவள், அக்காற்றின் செய்கையை, இச்சீ…என சபித்தவளாய், காட்டைக் கடந்து, பாலையொத்த ஆற்றுமணலில் கடந்தவளாக இருந்தாள்.
@@@
ஜம்மு மலைப்பிரதேசம்.
கையில் இன்சாஸ் துப்பாக்கி, மடியில் தோட்டாக்கள் நிரப்பப்பட்ட மேக்ஜின், என நின்றவன்தான் இந்த அரவிந்தன். இப்பொழுது அவன் சிப்பாயோ, படையாளனோ, ஜவானோ அல்ல. ஜெசிஓ, ஜுனியர் கமிசன் ஆபிசர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிராய்ச்சியையொட்டி, பனி சிகரம், பனி மரம், பனி மனிதர்கள்,…என பனியும் பனிசார்ந்த நிமித்தத்தில் அவனுக்கான பணி. எந்நேரத்திலும் மரணம் நிகழும்? யார் மனித வெடிகுண்டாக மாறுவர்? எதிரி யார், நண்பன் யார்? தனக்கு முன் நிற்பவன் இந்நிலத்தின் மைந்தனா, இல்லை ஊடுறுவாலானா? எதையும் சரியாகப் புரிந்துகொள்ளவோ, பிரித்துப்பார்க்கவோ முடியாத அகடும், முகடும், பள்ளத்தாக்கும் கொண்ட பணி அவனுடையது.
எப்பொழுதும் அவனுக்கு மரணம் நிகழலாம் என்பதைப் போல அவனுக்கானத் தொலைதொடர்பு சமிக்ஞை கிடைத்துவிடுவதில்லை. அப்படியே கிடைத்தாலும் இராணுவ முகாம் அவனுக்குக் கொடுத்துவிடுவதுமில்லை. இரு வாரத்திற்கு ஒரு நாள் வீடு, உறவினருடன் பேச வாய்ப்பு கொடுப்பார்கள். அப்படியாக அன்றைய தினம் கிடைத்திருந்த வாய்ப்பை பூங்குழலிடம் பேச பயன்படுத்திக்கொண்டான்.
அவன் அதிகாரியானதன் பிறகு, அவன் பூங்குழலிக்கு விடுக்கும் முதல் அழைப்பு இது. ‘நீ முன்னே மாதிரி பேச மாட்டீயோனு நினைச்சிட்டேன் அரவிந்த்’ என்பதாகத் தொடங்கிய உரையாடல், கல்லூரி கால நினைவுகளை வட்டம்கட்டி, வலம் வருவதாக இருந்தது. வார்த்தைக்கு வார்த்தை குழலி என உச்சரிப்பவனாக இருந்தான். ‘ப்ளீஸ் குழலி, நம்புப்பா குழலி, சத்தியமா குழலி, ஆமாம் குழலி..’ இப்படியாகத்தான் பேச்சின் போக்கு இருந்தது.
அவள் பெயர் பூங்குழலி என்றாலும், காதல் நட்பாக இருந்த காலத்தில் குழலி என்றே அழைக்கத் தொடங்கியிருந்தான். அதுவே அவனுக்கான அவளது பெயராகி விட்டிருந்தது.
‘உன்கிட்ட பேசிக்கிட்டே இருக்கணும் போலிருக்கு குழலி. வள்ளுவன் சொல்வான் இல்லையா, ஒரு பார்வை நோய், இன்னொரு பார்வை அந்நோய்க்கு மருந்தென. வள்ளுவனுக்குப் பார்வை, எனக்கு உன் குரல்’ என்றான். இடையிடையே முத்தம் கொடுத்தான். அவனது முத்தச்சத்தம் அவளது காது மடல்களைச் செல்லமாகக் கடிப்பதைப் போலிருந்தது.
‘இப்ப நான் எங்கே உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்கேன் தெரியுமா குழலி?’
‘எங்கே ?’
‘உன்னாட இதயத்தில’
இப்படிதான்! சில நேரம், அசாத்திய பேச்சால் அவளைத் திக்குமுக்காட செய்துவிடுவான்.
‘உண்மையச் சொல்லு, எங்கே உட்கார்ந்து பேசுறே?’
‘பங்கர், காப்பகழி. அதற்குள்ளே ஒரு திட்டு. அதில உட்கார்ந்திருக்கேன்.’
‘குளிரலையா?’
‘குளிர் நடுக்கத்தைத் தணிக்கத்தானே உன்க்கிட்ட பேசுறேன்..’
அவளது வெட்கத்துடன் கூடிய சிணுங்கல், அவனுக்குக் கேட்டது.
‘அரவிந்த், உன்னைப் பார்க்கணும் போலிருக்கு…’
‘நீ, என் முன்னேதானே நிற்கிறாய்’
‘அய்யோ, என்னடா சொல்கிறாய் அரவிந்த்?’
‘என் பங்கருக்கும் வெளியே ஒரு ஆப்பிள் மரம் நிற்கிறது. நான் தினமும் உரையாடுவது அதன் கூடதான். எனக்கு இங்கே நீ, இந்த மரம்தான்’
‘என் அளவுக்கு அந்த மரம் அழகா?’ , .
‘உன்னை விடவும் அழகு’
‘படுவா, வையடா போனை’ பொய்யாகக் கோபித்துக்கொண்டாள் பூங்குழலி.
‘நீ அழகுதான் குழலி, ஆனால்…’ அவன் மேலும் பேச முடியாமல் இழுத்தான்.
‘என்ன ஆனால்?’
‘இரவில் நீ பேரழகு …’
‘அப்ப பகலில் யாரடா அழகு?’ அவனிடம் அவள் சண்டைக்கு நின்றாள்.
‘ஆப்பிள், அது காய்த்துத் தொங்கும் மரம், மரத்தை போர்வையைப் போல மூடியிருக்கும் பனி, அந்தப் பனியைக் கொத்திக்கொத்தி விழுங்கும் நீலநிறப் பறவை,…’
அவள் ‘உம்’ போடாமல் வெறுமென இருந்தாள். ‘நீ என்னோட காதல ஏத்துக்கிட்ட மறுநாளு உனக்கு கொலுசு வாங்கிக்கொடுத்தேனே, ஞாபகமிருக்கா குழலி?’
‘அதைத்தானே இன்னும் அணிஞ்சிருக்கேன்’
‘அந்த வெள்ளியை விடவும் பனி போர்த்திய காஷ்மீர் அழகு. பகல்ல அதோட அழகைப் பார்க்க, நம் நான்கு கண்களும் போதாது. ஆப்பிள், ஆப்பிள் மரத்தைச் சுற்றி நிற்கும் சினார் மரங்கள், அதன் இதய வடிவம், ரோஜா கூட்டம், ரிலிப் மலர்கள், அதைச் சுற்றி வட்டமிடும் தேனீக்கள், அப்பப்பா…’
‘அய்யோ, போதும். அதைப் பார்த்து மயங்கி, என்னை மறந்திடாதே. என் அப்பா கொண்டுவந்த அத்தனை மாப்பிளைகளையும் உன்னை நம்பி பிடிக்கவில்லையெனச் சொல்லிட்டேன்…’
‘குழலி, இன்னுமா என் மீது உனக்கு சந்தேகம் வருகிறது. என் உடல் உன் இதயத்தால் ஆனதடி…’
அவளது பெருமூச்சு அவனது பனி நடுக்கத்தைத் தணிப்பதைப் போலிருந்தது.
‘குழலி, இது நடந்து ஐந்தாறு மாதமிருக்கும். நான் ஜம்முவில் ஜவானாக , துப்பாக்கி, தோட்டா, தொலைநோக்கிக் கருவியென நின்றுகொண்டிருந்தேன். அன்றைய தினம் நல்ல பசி. ஆர்மட்ரெஜிமண்டினர் வருவார்களா, பீரங்கி, துப்பாக்கி ஏத்தியபடி டாட்ரா வண்டிகள் வருமா எனக் காத்திருந்தேன். எனக்கான மதிய உணவு அதில்தான் வரும். மணி இரண்டைத் தாண்டியும் வண்டி வருவதாக இல்லை.
‘பின்னே ?’
‘தப்படி தூரத்தில ஒரு ஆப்பிள் மரமிருந்தது. அதை நோக்கி நடந்து நிமிர்ந்து பார்த்தேன். தலைக்கும் மேல் ஆப்பிள். எம்பித் தலையை நீட்டி, கடிக்கலாமென வாயைத் திறந்தேன். ஆப்பிளில் மெழுகியிருந்த பனி, அதோட மணம், நிறம், எப்படியிருந்தது தெரியுமா’
‘எப்படி இருந்தது?’
‘ஒரு நாள் காலேஜ் கேன்டின்ல ஒரு ஐஸ் கீரிமை வாங்கி, நுனி நாக்கால் நக்கி, என்னிடம் நீட்டினாய். அதை வாங்கிய நான், அதே இடத்தில் சுவைத்து, தேவாமிர்தமாதிரி இருக்கெனச் சொன்னேன்’
‘இம், இம் ஞாபகமிருக்கு அரவிந்த் …’
‘அப்ப உன் கன்னம் எப்படி இருந்தது, தெரியுமா?’
‘எப்படி இருந்தது?’
‘இந்த ஆப்பிளைப் போலிந்தது’
பூங்குழலியால் ஒன்றும் பேச முடியவில்லை.
‘என்ன குழலி அமைதியாகிவிட்டாய்’
‘சரி அரவிந்த், அந்த ஆப்பிளை என்ன செய்தாய்?’
‘ஒரு நாள் கராத்தே கிளாஸ கட் அடிச்சிட்டு என் கூட ஜாக்கிங் வந்தே’
‘ஆமாம்..’
‘இருவரும் முருகன் கோயிலத்தாண்டி ஓடிக்கிட்டிருந்தப்ப, உன்னோட சூ நாடா அவிழ்ந்துவிட்டது. ஒரு நிமிஷம் அரவிந்த்னு சொல்லி, ஒரு பக்கமா உட்கார்ந்து, காலை நீட்டி, நாடாவைக் கட்டினாய். நான் ஓடி வந்து குனிந்துப் பார்த்தேன். உன் கூந்தலில் மரிக்கொழுந்து வாசணை. உன்னோட கூந்தல நோக்கி என்னோட நாசியைக் கொண்டு வந்தேன். அப்ப நீ நிமிர்ந்து என்னைப் பார்த்தாய். நான் உன் கண்களைப் பார்த்தேன். நீ மெல்ல நிமிர, உன்னோட கன்னம் என்னோட உதடுக்கு வந்தது. வெட்கம் வடிந்துபோயிருந்த உன்னோட கன்னத்தை என்னோட உதடுக்குக் கொடுத்தாய். உன் மீது வீசிய வாசணையை உள்வாங்கி உன் கன்னத்தை ஒரு கடி கடித்தேன். வலி பொறுக்க முடியாம நீ சிணுங்கினாய். அந்த சிணுங்கல் சத்தம்தான் நான் கடித்த ஆப்பிளோட சத்தம்….’
@@@
பூங்குழலி, அரவிந்தனின் ஊரை நெருங்கியிருந்தாள். அவனுக்காக ஊர் விழித்திருக்கும், வீடுதோறும் விளக்குள் எரியும். திண்ணையில், முற்றத்தில், பொதுத்திடலில், மரத்தடியிலென, ஊர்க்காரர்கள் கூடி, அரவிந்தன் குறித்து பேசவும், சோகத்தில் மூழ்கவுமாக இருப்பார்கள் என நினைத்தபடி அவள் ஊரைத் தொட்டிருந்தாள். அவள் ஊருக்குள் நுழைகையில், கிழக்கு அவளது கண்களைப் போல விடிந்திருந்தது.
இதற்கு முன் அவள் இந்த ஊருக்கு வந்தவளில்லை. அரவிந்தன் அவ்வபோது பேச்சுக்கிடையில் சொல்லும் அடையாளத்தை வைத்தே வந்தடைந்திருந்தாள். இதோ, அவர் சொன்ன புங்கை மரம். இந்த மரத்தில் நின்னபடிதான் உன்னிடம் பேசிக்கிட்டிருக்கிறேனென ஒரு நாள் சொன்னான். ‘குழலி, உன்னை நினைத்தபடி, என் வீட்டு வேப்பில்லையை மென்றால் இனிக்குதடி’ என்றிருந்தான். அவன் சொன்ன வேப்பமரம் இதுதான்.
‘பூங்குழலி’ பின்னால் அவளை யாரோ அழைப்பதைப் போலிருந்தது. நின்று திரும்பி மூச்சுவாங்கினாள்.
‘யாரது?’
‘நான்தான், செல்வி’
‘செல்வி?’
‘ஆமாம், உன் கல்லூரித் தோழியடி நான். உனக்கும் அரவிந்தனுக்கும் காதல் தூதுவளாக இருந்த என்னையே மறந்துவிட்டாயா, இந்த ஊரில்தான் நான் திருமணம் முடிக்கப்பட்டிருக்கேன்…’
பூங்குழலியால் நம்ப முடியவில்லை. அவளைக் கட்டி அணைத்து, ஆரத்தழுவினாள்.
‘நீ இந்நேரத்திற்கு எப்படியும் வந்துவிடுவாயென நினைத்திருந்தேன். காரணம், நீ அரவிந்தன் மீது கொண்ட காதல் அப்படி…’
‘அரவிந்தன் வீடு?’
‘அதோ, விடிவிளக்கு எரிகிறதே, அதுதான்’
அவனது வீடும், வாசலும், தெருவும் அத்தனை அமைதியாக இருந்தது. அதைப் பார்க்க அவளுக்குள் கோபம் மூண்டது. ‘என்ன கொடுமை இது. அவனுக்காக ஒருத்தர்க்கூட இந்த ஊரில் விழித்திருக்கவில்லையே, அவன் இந்த நாட்டுக்காக, குண்டடிப்பட்டு குற்று உயிராகக் கிடக்கிறான். ஆனால் இவர்கள், விடிந்தும் குறட்டையில் இருக்கிறார்கள்,..’
‘இவ்வளவு நேரம், இந்த ஊரே அவனுக்காக கண் முழித்திருந்து, இப்பதான் கண் அமர்ந்தது..’ செல்வி சொன்னப் பதிலை பூங்குழலியால் ஏற்க முடியவில்லை. ‘என்ன வேண்டுமானாலும் சொல்லும் செல்வி. இந்த ஊரையும், குடியையும், நினைத்து பெரும் ஓலமெடுத்து கத்த வேண்டும் போலிருக்கிறது…’ என்றவள் செல்வி வீட்டு திண்ணையில் அமர்ந்து, அரவிந்தன் வீட்டைப் பார்த்தபடி, கண்ணீர் சொரிந்தாள்.
பூங்குழலி அளவிற்கு, செல்வியும் துயருற்றிந்தாள். தான் தோழியாகவும், தூதுவளாகவும் இருந்த இந்தக் காதல் ஜோடிக்கு ஏதேனும் நடந்து, அப்பலியை தான் சுமக்கப்போகிறேனோ, என்கிற கவலை அவளை அரிப்பதாக இருந்தது. அதற்காக அவள் நேற்றிரவு, ஊர்க்குளத்தில் குளித்து, தண்ணீர் சொட்ட, காளிக்கோவிலை மூன்று சுற்று வலம் வந்ததை பூங்குழலியுடன் சொன்னாள். அவளைத் தேற்றினாள் பூங்குழலி. ‘நீ ஒன்றும் கவலைப் படாதே. உன் தூது ஒரு நாளும் வீண் என்றாகி விடாது. அரவிந்தன் எனக்காக, விரைவில் வரத்தான் போகிறான். என் காதல் நோயை அவன் கூடிய விரைவில் தணிப்பான்..’ என்றவள், அவன் இந்நிலைக்கு ஆளானதற்கு காரணம் நான்தான், என்பதை மனதிற்குள் நினைக்கவும், அதை நினைத்து புழுங்கவும், தோழியிடம் சொல்லவும் செய்தாள்.
@@@
இந்திய எல்லைக்குள் தீவிரவாதி ஊடுறுவல், என்கிற சமிக்ஞை இராணுவத்திற்கு கிடைத்திருந்தது. விடுப்பிலும், வார ஓய்விலுமிருந்தவர்கள் அவசரமாகக் கூட்டுப்படைத் தளத்திற்கு அழைக்கப்பட்டார்கள்.
முதல்நாள் இரவு நீண்ட நேரம் குழலியுடன் பேசி, அவள் குறித்த நினைவால் தூக்கமிழந்திருந்தான் அரவிந்தன். விடிகாலையில்தான் அவனுக்குத் தூக்கம் வந்திருந்தது. அவன் ஆழ்ந்த தூக்கத்திற்குள் நுழைகையில், அவன் தங்கியிருந்த விடுதியின் அறைக்கதவு வேகமாகத் தட்டப்பட்டது.
‘யார்?’ இந்தியில் கேட்டான் அரவிந்தன். சுப்ராஜி என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவன், அடுத்த அறையில் தங்கியிருக்கும் சிப்பாயாக இருந்தான்.
‘பாஸ் வேர்டு’
‘ஜெய்கோ’
அரவிந்தன் கண்களைத் தேய்த்துக்கொண்டு எழுந்து, உட்தாழ்பாளைத் திறந்து, சுப்ராஜி அறைக்குள் நுழைந்ததும், உட்தாழ்ப்பாளிட்டான். அவன் அத்தனை வேகமாகத் திறந்து சாத்துவதற்குள் பெரும் பனிமூட்டம் அந்த அறையை பெரும் ஆயுதம் கொண்டு தாக்குவதைப் போல தாக்கியது.
‘தீவிரவாதிகள் நுழைந்துவிட்டார்களாம்’
தினம் தினம் கேட்கும் செய்திதான் அது. அன்றைய தினம் அதைக் கேட்க அவனுக்கு அருவருப்பாக இருந்தது. என்ன வாழ்க்கையடா இது, கைகளைத் தேய்த்து கண்களுக்கு ஒத்தடம் கொடுத்துக்கொண்டான்.
‘காஷ்மீர் பூமிக்கு விடிவு காலமென ஒன்று கிடையாதா?’ தலையில் உடுத்தியிருந்த பனிக்குல்லாவைக் கழட்டியபடி கேட்டான்.
‘அரவிந்த், எழுந்து, சன்னல் வழியே பார். வெள்ளி மலை, பச்சைப்பசேல், வானமே கடலாக, சுத்தமான காற்று, பனிபெய்யும் ஓசை,…இவ்வளவும் கொண்ட காஷ்மீர் யாருக்குத்தான் பிடிக்காது…’
வெள்ளி என்றதும், அரவிந்தனுக்கு நேற்றிரவு குழலியுடன் பேசிய வெள்ளி கொலுசு நினைவுக்கு வந்தது. அவன் சன்னல் வழியே வெளியைப் பார்த்தான். வெள்ளி மலை, பனிமரங்கள், மந்தையாக மேயும் நீல ஆடுகள், காட்டெருமை, கறுப்பு, நீல, சிவப்பு கழுத்து நாரைகள்…
ஒரு திட்டில் தொலைநோக்கி தொங்கிக்கிடந்தது. அதன் வழியே டியாக்சி கிராமத்தைப் பார்த்தான். குன்றுகளின் மீது சிகரம் வைத்தாற்போன்ற வீடு வீடு வீடுகள். ஒரு வீட்டின் சுவரில் புதிதாக எழுதித் தொங்கிக் கிடந்ததை வில்லையால் பெரிதுபடுத்திப் பார்த்தான். ‘இந்தியர்களே, எங்கள் பூமியை விட்டு வெளியேறுங்கள்’ என எழுதப்பட்டிருந்தது.
‘நாமெல்லாம் பாவப்பட்ட ஜென்மங்கள்தான்..’
‘எப்படி சொல்கிறாய் அரவிந்த்?’
‘பின்னே, நம்மால் ஒரு நாளேனும் நிம்மதியாகத் தூங்க முடிகிறதா, காஷ்மீரிகள் நம்மை எதிரியாகப் பார்க்கிறார்கள். நாம், ஒவ்வொரு காஷ்மீரியையும், தீவிரவாதியோவெனப் பார்க்கிறோம். இங்கு நமக்கு யார் எதிர், யார் நண்பன் சொல்லும்?. இங்கே நீயும் நானும் கூட பாஸ்வேர்டு மூலமே நண்பனாக இருக்கிறோம். அதை மறந்துவிட்டால், நீ என்னைச் சூடுவாய், நான் உன்னைச் சுடுவேன்…’ பேசிக்கொண்டே, அவன் அத்தனை வேகமாகக் கிளம்பினான். இராணுவ உடை, சொட்டர், கவசம், சூ,..இத்யாதிகள். அவனுக்கான அன்றைய பணி, எல்லையோர ஜவான்களை மேற்ப்பார்வை செய்வதாக இருந்தது.
தீவிரவாதிகள் ஊடுறுவும் காலத்தில், நடந்து எங்கேயும் பயணம் செய்யக் கூடாது. ரோந்து, டேங்கர் வண்டிகள் இயக்கக் கூடிய தரைத்தளம் அல்ல அது. ஒற்றையடிப் பாதை. குன்றுகளின் கூடுவாயிடத்தில் ஓடிக்கிடக்கும் ஒற்றையடிப் பாதையின் வழியேதான் அவன் பயணிக்க வேண்டும். அவன் பயணம் செய்வதற்கு, இராணுவத்திற்குச் சொந்தமான கழுதை ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் ஏறி பயணித்தபடி, அரவிந்தன் அன்றைய பணியைத் தொடங்கியிருந்தான்.
அவனிடம் தொலைநோக்கி கருவி, ஒரு துப்பாக்கி, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட பை, தலைக்கவசம், எறிகுண்டு, தூரத்தில் நின்றபடி எச்சரிக்கை செய்யும் கைக்கு அடக்கமான ஒலிப்பெருக்கி, சிற்றுண்டி, மாத்திரை,.. எல்லாம் இருக்கிறதாவென ஒரு முறைக்கு இரு முறை பார்த்ததன் பிறகே அன்றைய ரோந்துப் பணியைத் தொடங்கினான். ஆனால், எதோவொன்றை மறந்து செல்வதைப் போன்ற உணர்வு அவனை அரிப்பதாக இருந்தது.
அவனைச் சுற்றிலும் தெரிந்த பனிமலையைப் பார்க்கையில், குழலிக்கு தான் வாங்கிக் கொடுத்த கொலுசும், ஆப்பிள் மரத்தைப் பார்க்கையில், குழலியும் நினைவுக்கு வந்தாள். அவனால் குழலியை நினைக்காமல் இருக்க முடியவில்லை. நாளை விடுப்பு என்றேன். அப்படியானால், விடிந்ததும் திரும்பவும் என்னை அழை என்றிருந்தாள். என் அழைப்புக்காக அவள் காத்திருக்கவே செய்வாள், அதை நினைக்கையில் அவனது கண்கள் கலங்கச் செய்தன.
இரு குன்றுகள் கூடுவாயிடத்தில் ஒரு சிப்பாய் நீண்ட துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தான். துப்பாக்கியை அவன், மார்போடும் வயிற்றோடும் அணைத்தபடி, விடைத்து நிற்பவனாக இருந்தான். துப்பாக்கியின் முனை தலைக்கு மேலாக நட்டுண்டு நீட்டி நின்றது. அதைப் பார்க்கையில், தான் சிப்பாயாக பணியாற்றிய காலமும், குழலியின் கன்னமென ஆப்பிளைக் கடித்தத் தருணமும் நினைவுக்கு வந்தன.
கழுதையிலிருந்து குதித்து இறங்கிய அவன், தானொரு அதிகாரி என்பவனாக அவனை நோக்கி நடந்தான். சிப்பாய், அவனை ஏறிட்டுப் பார்த்து, எதிரில் வருவது தன்னைப் பார்வையிட வரும் அதிகாரியா, அதிகாரியைப் போலிருக்கும் தீவிரவாதியா, எனப் பார்க்கலானான்.
‘தாம் ‘ துப்பாக்கிய ஏந்திய சிப்பாய் பெருங்குரலெடுத்துக் கத்தினான். அக்குரலைக் கேட்டதும், அரவிந்தன் அதே இடத்தில் நின்றான்.
‘கோன் கி காத் அப்பர் கார்’
அதிகாரியாகவே இருந்தாலும், சிப்பாய் உத்தரவின் பேரில் கையை மேலே தூக்கியாக வேண்டும். அவன் தூக்கினான்.
‘ஆஜ் கா பாஸ்வேர்டு கியா கி?’
இந்தியில் ஒலித்த அக்கேள்வி அவனுக்குள், ‘இன்றைய சங்கேத சொல்லைச் சொல்’ என ஒலிப்பதாக இருந்தது. அவன் வேகமாக நினைவுகூர்ந்து பார்த்தான். குழலி, பூங்குழலி, சாரிடா குழலி,… சொற்களைத் தவிர அவனது நினைவில் வேறொன்றும் நினைவாடவில்லை.
‘பாஸ்வேர்டு?’
‘குழலி, குழலி, பூங்குழலி’
‘வாட்! குழலி ?’
சிப்பாய் உரக்கக் கேட்பது, அரவிந்தன் தலைக்குள் தீப்பிடிப்பதைப் போலிருந்தது. குழலியையே நினைத்துக் கொண்டிருந்ததில் அன்றைய சங்கேத மொழியை அவன் மறந்து நின்றிருந்தான். அவன் கைகளைக் கீழே தாழ்த்தவில்லை. தூக்கிய கைகள் தூக்கியபடியே இருந்தன. அவனது ஊனுடம்பு, இரத்தம், உயிர் யாவும் உருகி கால்வழியே ஓடுவதாக இருந்தன.
சிப்பாய், அரவிந்தனின் தொடை மீது குறி வைத்தான். தொடையில் அமிலத்துளி விழுந்து, அரித்து, ஊடுறுகிற கணத்தை அவன் உணர்ந்தான். அரவிந்தனின் மூளை அத்தனை வேகமாக அலசியது. சிப்பாயின் துப்பாக்கிக்குறி மார்புமீது குவிவதற்குள், அதிகாலையில், அவனை எழுப்புகையில், சுப்ராஜி சொன்ன அந்த ஒரு வார்த்தை நினைவுக்கு வந்தது. உரக்கக் கத்தினான் ‘ஜெய்கோ’
பூங்குழலி இதைச் சொல்லி முடிக்கையில், அரவிந்தன் அளவுக்கு அவளுக்குப் பெருமூச்சு வெடித்தது.
– அண்டனூர் சுரா