பாட்டி வீட்டு பரண் – பகுதி 1
“என் பேத்தி பொண்ணே.”
பதில் வர வில்லை.
“என் அம்மு பொண்ணே”. பெருங்குரலில் கூப்பிட்டாள் பாட்டி
பதில் வர வில்லை.
நமுட்டு சிரிப்பு சிரித்தபடி பாட்டி வேணுமென்றே ,”என் ஐஸ்வர்ய சுகந்தம்மா ” என இழுக்க .
“No… Call me Ash.” என்று சிணுங்கிய படி ஒன்பது வயது பெண் ஒளிந்திருந்த இடத்தில் இருந்து வெளியில் வந்தாள்.
“ஆஷ் ஆ? அப்படினா சாம்பல் இல்ல. என் தங்கத்தை எப்படி அப்படி கூப்பிடுவேன்”
“இந்த ஐஸ்வர்யம் சுகந்தம் என்ன பேரு. யாரு வெச்ச எனக்கு ?”
“அது என் அம்மா பேரு தங்கம். அதை அப்படியே கூப்பிட்டா எனக்கு என் அம்மா என் கூடயே இருக்கறா போல ஒரு நினைப்பு”
“ரொம்ப பழைய பேரா இருக்கு. என்னோட friends க்கு எல்லாம் வாயில நுழைய மாட்டேங்குது . அமெரிக்கா ல இப்படி எல்லாம் எப்படி கூப்பிடுவாங்க ? அதனால என்னை ஆஷ் (Ash) ன்னே கூப்பிடுங்க”.
“ஹ்ம்ம் சொற்கள் நல்லதா இருக்கணுமே தங்கம். சொல்லுக்கு சக்தி இருக்கு தங்கம். சாம்பல் நா சொல்லி கூப்பிடறது”.
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது பாட்டி. சும்மா Ash ன்னு கூப்பிடுங்க.”.
மேலே எங்கே இருந்தோ ஒரு பட பட சத்தம் ஐஷு வை திசை திருப்பியது. பாட்டிக்கு அது கேட்டது போலவே தெரிய வில்லை.
“அது என்ன சத்தம் பாட்டி?”
“என்ன சத்தம்?”
“உங்களுக்கு கேட்கல?”
“இல்லையே. உனக்கு பசிக்குதா ? நான் பணியாரம் பண்ணி தரவா ?
“சரி. வெளில போன அம்மா எப்போ வருவாங்க?”
“சாயங்காலம் ஆகும் தங்கம்” சொல்லியபடி பணியாரம் செய்வதில் முனைப்பானாள் பாட்டி.
ஐஷுவுக்கு அந்த கிராமத்து பழைய வீட்டில் போர் அடித்தது.
ரெண்டு நாளைக்கு முன் தான் அவளும் அவளுடைய அம்மாவும் கோடை விடுமுறைக்காக அமெரிக்காவில் இருந்து அங்கு வந்தனர்.அம்மா ஏதோ வேலைக்காக காலையில் போனாள். இன்னும் வருவதற்கு நேரம் ஆகும். ஐஷு வீட்டைச் சுற்றி சுற்றி வந்தாள். கொஞ்சம் நேரம் தாத்தா பாட்டியோடு விளையாடினாள்.
தாத்தா கொஞ்ச நேரம் தூங்கறேன்ன்னு உள்ளே சென்று விட்டார். அவ்வளவு பெரிய வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த ஒன்பது வயது சிறுமி சுற்றி சுற்றி வந்தாள். ஊரிலே இருந்து எடுத்து வந்த iPad எடுத்து நோண்டினாள். அவளுடைய தோழிகள் அவளுக்கு செய்தி அனுப்பி இருந்தனர். அவளது இணைபிரியா தோழி ஒரு குறுந்செய்தி ஒலி செய்தியாக அனுப்பி இருந்தாள்.
“Hey Ash. We are missing you in summer camp here”.
ஐஷு ஹ்ம்ம் என மூச்சு விட.. மீண்டும் அதே பட பட சத்தம்.
என்ன அது என்ற ஒரு ஆர்வம் எழுந்தது. பாட்டி உள்ளே ஏதோ செய்து கொண்டிருந்தாள். தாத்தா தூங்குகிறார். சத்தம் வந்த திசையை நோக்கி ஐஷு நடந்தாள்.
பாட்டி வீடு ரொம்ப பெரிய பழைய வீடு. பல நூறு வருடங்களுக்கு முன்னாடி கட்டினதுன்னு தாத்தா சொல்வார். ரெண்டு மூணு கட்டு இருக்கும் வீடு, நிறைய தூண், மர வேலைகள் எல்லாம் இருக்கும். சத்தம் எங்கே இருந்துன்னு வருதுன்னு ஐஷுக்கு சுற்றி சுற்றி வந்தாள்.
அவள் தேடுவது தெரிந்தது போலவோ என்னவோ, சத்தம் மீண்டும் மீண்டும் கேட்டது.
சுற்றி சுற்றி வந்து ஒரு பெரிய தூணின் முன் வந்து நின்றாள் ஐஷு. நாலு பெரிய ஆட்கள் கைகளை இணைத்து சுற்றினால் கூட இணைக்க முடியாத அளவு சுற்றளவு கொண்ட பெரிய தூண்.
அந்த தூணின் அருகில் காதை வைத்து கேட்டாள். பட பட சத்தம் அதிகமாக கேட்டது.
ஒரு சிறிய குறுகுறுப்புடன் சுற்றி சுற்றி வந்தாள் ஐஷு. அந்த தூணின் பகுதி ஒன்றில் சிறிய வளைவு இருந்தது. அந்த வளைவை தொட, திடீரென்று தூண் இடையில் ஒரு பிளவு தோன்றி உள்ளே வளைவான ஒரு சிறிய படிக்கட்டு தென் பட்டது.
ஐஷு அவளுக்கே உரியதான அந்த ஆர்வத்தோடு படிக்குள்ளே கால் எடுத்து வைத்தாள்.
(தொடரும் )
–லட்சுமி சுப்பு