பாட்டி வீட்டு பரண் – பகுதி 2
முன் பகுதி சுருக்கம்
அமெரிக்காவில் இருந்து ஐஷு பாடி வீட்டிற்கு விடுமுறைக்காக வருகிறாள். அங்கு பாட்டி வீட்டு தூணில் ஒரு அதிசய படிக்கட்டு இருப்பதை கண்டு அதன் உள்ளே செல்கிறாள்.
இனி ..
இயல்பிலேயே ஐஷு ஒரு துறு துறு பெண். அதனாலேயே அந்த தூண் திடீரென்று பிளவு கொண்டு அதில் படிக்கட்டுகள் தெரிந்த போது பயம் இல்லாமல் அதில் காலை வைக்க முடிந்தது. வளைந்து வளைந்து சென்ற அந்தப் படிகளில் பழைய ஒட்டடைகள் இருந்தது. அதை ஒதுக்கிவிட்டு அந்தப் படியில் ஏறினாள் ஐஷு.
வளைந்து வளைந்து சென்ற அந்தப் படிகள், கட்டில் உள்ள ஒரு சின்ன அறைக்குக் கொண்டு சென்று விட்டது. அதிக வெளிச்சம் இல்லாத ஒரு சின்ன அறை
‘Wow this looks like an attic. (பரண் மாதிரி இருக்கு)’. ஒரு சிறிய பெண் நிற்கும் அளவிற்கு உயரமான அந்த அறையில் எக்கச்சக்கமான தட்டு முட்டு சாமான்கள்.
அங்கங்கு பெரிய மரப்பெட்டிகளும் இருந்தன. சில கணங்கள் அந்த இருட்டிற்குக் கண் பழகிய பின் மெல்ல அந்த அறையின் பகுதியில் நடக்கத் தொடங்கினாள். ஐஷு அந்தப் பட பட சத்தம் வருகிறதா என்று கேட்டபடி அந்தப் பரணில் இருக்கின்ற பெட்டிகளைத் தேடினாள். உள்ளே ஏதேதோ இருந்தது.
நிறைய பெட்டிகளில் புத்தகங்கள் இருந்தன. பழைய பழுப்பேறிய புத்தகங்கள்.
“அடேங்கப்பா எவ்வளவு புத்தகம். இதுல்லாம் யாருது? அம்மா படிச்ச புத்தகமோ ? அம்மா பேரு இருக்குமோ?”
அச்சிடப்பட்ட புத்தகங்களில் பெயர் தேடினாள். அடுக்கி வைத்த புத்தகங்களும், வரிசையாக ஏடுகளும், பழைய வகை பென்சிலும் இருந்தது.
கூர்மையான பென்சில் போல இருந்த ஒரு கருவியை எடுத்தாள் ஐஷு. அங்கு இருந்த ஒரு காகிதத்தில் Ash என்று எழுதினாள்.
மீண்டும் பட பட சத்தம் பலமாக கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கி நகர்ந்தாள். அந்த பரணில் ஒரு ஓரத்தில் இருந்த பெரிய இரும்பு பெட்டியில் இருந்து அந்தச் சத்தம் கேட்டது.
பட்டாம்பூச்சி ஏதேனும் மாட்டி இருக்குமோ என்று நினைத்தபடி அந்தப் பெட்டியின் தாழ்ப்பாளைத் தூக்கினாள். மிக கனமான பெட்டி. அந்த தாழ்ப்பாளை ஒரு கையால் தூக்க முடியவில்லை. தன் பலம் கொண்டு ரெண்டு கைகளிலும் இழுத்துத் திறந்தாள்
உள்ளே இருந்து ஒரு சிறு பழுப்பான காகிதம் பட படவென்று அடித்தது.
தமிழ் எழுத்துக்கள் சில தெரிந்தது. ஐஷுவிற்கு முழுதாக தமிழ் படிக்க தெரியாது என்றாலும், எழுத்துக்களை அடையாளம் தெரியும். அதில் இருந்த ஆ த் .. என்று அவள் எழுத்துக் கூட்டி படிப்பதற்கு முன், அந்த புத்தகத்தில் இருந்து,
ஒரு பக்கம் பளீர் என்று வெளிச்சமாக பறந்து வெளியில் சென்றது. அந்த வெளிச்சத்தில் பரண் முழுவதும் நன்றாக தெரிந்தது ஐஷுவிற்கு.
ஆச்சர்யத்துடன் வெளிச்சமாக இருந்த அந்த பக்கத்தை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தாள் ஐஷு. அதில் இருந்த எழுத்துக்கள் நடப்பது போல தோன்றியது ஐஷுவிற்கு.
அந்த பக்கத்தை அவள் மெல்ல கை நீட்டி தொட, திடீரென்று பறப்பது போல தோன்றியது ஐஷு விற்கு.
அந்த காகிதத்தில் இருந்த சொற்கள் உயிரோடு இருப்பது நகர்ந்து வெளியில் வந்தது . இவளை அந்த புத்தகத்தின் உள்ளே இழுத்து கொண்டு செல்வது போல தோன்றியது.
ஐஷு விற்கு திடீரென்று கொஞ்சம் பயம் வந்தது. ஆனால் என்ன நடக்கிறது என்று புரிவதற்கு முன், அவ்வளவு பெரிய பெட்டிக்குள் அந்தப் புத்தகத்தின் உள்ளே சென்று கொண்டு இருந்தாள் அவள். (தொடரும்)
-லட்சுமி சுப்பு